எம்ஜிஆரை புறக்கணிக்கும் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட தயாரா? விஜயகாந்த் சவால்
சிவகங்கை: இரட்டை இலை சின்னம் மற்றும் எம்ஜிஆர் புகைப்படம் இல்லாமல் சேவல் சின்னத்தில் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியுமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சவால்விடுத்துள்ளார்.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில், விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே விஷ செடிகள்தான். 'மக்களுக்காக நான்' என்று கூறும் ஜெயலலிதாவுக்கு ஏழைகளின் பசி பற்றித் தெரியுமா என்றால் தெரியாது.
அம்மா பெயர்கள்
உணவகம், குடிநீர், உப்பு என எல்லாவற்றுக்கும் அம்மா பெயர் வைத்துள்ள ஜெயலலிதா, இந்த திட்டங்களுக்கெல்லாம் எம்ஜிஆர் பெயரை வைக்க முடியுமா?, அதற்கு மனது வருமா?
சேவல் சின்னம்
இந்த அம்மா பட்டம் யார் கொடுத்தது?, நீங்களாக வைத்துக்கொண்டதுதான் அம்மா பட்டம். உங்களுடைய சின்னமான சேவல் சின்னத்தை போட்டியிடுங்க. இரட்டை இலை சின்னத்தை தூக்கிடுங்க. எம்ஜிஆர் படத்தையும் பயன்படுத்த கூடாது.
பயம்
சேவல் சின்னத்தில் நின்னா தோற்றுவிடுவோம் என்று ஜெயலலிதாவுக்கு பயம் உள்ளது. எனவே, தேர்தல் நேரத்தில் மட்டும் எம்ஜிஆர் படம் தேவைப்படுகிறது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
பழைய கதை
எம்ஜிஆர் மறைவையடுத்து, 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. எனவே ஜெயலலிதா சேவல் சின்னத்திலும், எம்ஜிஆர் மனைவி ஜானகி, இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டனர். அதில் ஜெயலலிதா தரப்பு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.