'மாடு பிடிக்கும் ஆசை இன்னும் மனசுக்குள்ள இருக்கு!'- விஜயகாந்த்
-எஸ் ஷங்கர்
2004... அப்போது நான் ஒரு பெரிய பத்திரிகைக் குழுமத்தின் தமிழ்ப் பதிப்புகளுக்குப் பொறுப்பாசிரியராக இருந்த நேரம்.
பொங்கல் சிறப்பு மலரில் விஜயகாந்தின் சிறப்புக் கட்டுரை வந்தால் நன்றாக இருக்கும் என விரும்பி, அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் மூலம் கேட்டிருந்தேன்.
ஒரு வாரம் கழித்து அவரும் ஒரு கட்டுரையைத் தந்தார். ஆனால் அது விஜயகாந்த் எழுதியதுதானா.. அட அவர் சொல்லச் சொல்ல இவர் எழுதியிருப்பாரா? அல்லது இவராகவே ஒன்றை எழுதிவிட்டாரா என்று சந்தேகம். கட்டுரைக்கு தலைப்பும் நன்றாக இல்லை. அதை நானே இஷ்டப்படி மாற்றினாலும் யாரும் கேட்கப் போவதில்லைதான். இருந்தாலும் அதிகாரப்பூர்வமானதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.
அந்த நேரத்தில் விஜயகாந்தின் பிரஸ் மீட் ஒன்று நடிகர் சங்க கட்டடத்தில் இருந்த சான்டோ சின்னப்ப தேவர் ப்ரிவியூ தியேட்டரில் போட்டிருந்தார்கள்.
சரி, இன்று அவரைச் சந்திக்க முடிந்தால் கேட்கலாம் என நினைத்து பிரஸ் மீட் சென்றேன்.
வழக்கம்போல பத்திரிகையாளர்கள் மீது கடும் கோபத்துடன் பேசினார் விஜயகாந்த். அவருக்கே உரிய குரலில் ஏற்றி இறக்கி, "நான் சொல்றதையெல்லாம் எழுதிடவா போறீங்களா? எதுக்கு இவ்வளவு போட்டோ எடுக்கறீங்க? போடப் போற ஒரு போட்டோவுக்கு ஏன் இப்படி அடிச்சிக்கிறீங்க?" என்று கோபப்பட்டார் (நியாயமான கோபம்தானே!).
அடடா, இவர்கிட்ட இப்போ நம்ம கட்டுரை மேட்டர் பத்தி பேச முடியாது போலிருக்கே.. என்று நினைத்துக் கொண்டேன்.
பிரஸ் மீட் முடிந்தது. பிஆர்ஓ டயமண்ட் பாபுவிடம், "கேப்டன் கிட்ட ஒரே ஒரு நிமிஷம் மட்டும் பேசணும் ஸார்.." என்றேன்.
"என்னம்மா இப்ப போயி கேட்டுக்கிட்டு.. அவர் டென்சனா இருக்காரும்மா.. அப்புறம் பார்க்கலாம்," என்றார்.
வெளியில் வந்து, வாயிலருகில் நின்றேன்.
விஜயகாந்த் தன்னை சூழ வந்துகொண்டிருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தபடி வந்தார். உடன் வந்த டயமன்ட் பாபு என்ன நினைத்தாரோ... "கேப்டன்... இவர் பேரு ஷங்கர்.. இந்த பத்திரிகையிலிருந்து வந்திருக்கார்... உங்ககிட்ட ஏதோ கேக்கணுமாம்...," என்று கூறியவர், "ஷங்கர்... கேட்டுக்கம்மா.." என்றார் என்னைப் பார்த்து.
டக்கென்று நின்றுவிட்ட விஜயகாந்த், "அதான் அங்கேயே நிறைய கேட்டுட்டாங்களே.. நீங்க என்ன கேக்கணும்?" என்றார்.
நான் அந்த பொங்கல் கட்டுரையைக் குறிப்பிட்டு.. "அது இந்த இஷ்யூல வரப் போகுது.. அதுல உங்கள ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்னு குறிப்பிட்டிருந்தீங்க.." என்றேன்.
"ஓ அதுவா.. உண்மைதான். நான் அண்ணன் ரஜினியோட மதுரை புறநகர் மன்றத்துல செயலாளரா இருந்தேன். நான்தான் அதை குறிப்பிடச் சொன்னேன்," என்றார்.
அடுத்து தலைப்புக்கு வந்தேன்.
"ஸார்.. அந்தத் தலைப்பு..."
"என்ன போட்டிருக்கு.."
"ஜல்லிக்கட்டுக் காளை விஜயகாந்தின் பொங்கல் அனுவங்கள்'-னு இருக்கு ஸார்" என்றேன்.
"அய்யே.. நல்லாவே இல்லையே.. இப்படியா எழுதிக் கொடுத்திட்டார்? சரி.. இதை தலைப்பா வச்சிக்கங்க... " என்று கூறி, சில விநாடிகள் முகவாயில் ஆள்காட்டி விரல் வைத்தார்.
அடுத்து பளிச்சென்று சொன்னார்...
"மாடு பிடிக்கும் ஆசை இன்னும் மனசுக்குள்ள இருக்கு!"
"வாவ்.. சூப்பர் ஸார்" என்றேன்.
சிரித்தபடி.. "ரொம்ப நன்றி.. ஆங்.. உங்க பேரென்ன?" என்று கேட்டுவிட்டுக் கிளம்பினார்!
-தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று பிறந்த நாள்!