மக்கள் விரும்பாததாலேயே மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகினோம்: விஜயகாந்த்
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மகிழ்ச்சியுடன் பிரிந்துவிட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை: மக்கள் விரும்பாததால் தான் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவனியாபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த் பேசியதாவது: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க டெல்லி வரை சென்று போராடுவேன். மதுரையில் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தே தீருவேன். திமுக, அதிமுகவால் தான் தமிழகம் சீரழிந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக தலவைர் கருணாநிதியை எனக்கு எப்போதும் பிடிக்கும், அவருடன் அறிக்கை போர் மட்டுமே நடத்தினேன் என விஜயகாந்த் கூறினார். மேலும், மக்கள் நலக் கூட்டணியுடன் சட்டசபை தேர்தலின் போது தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்திருந்தேன். மக்கள் விரும்பாததால் அந்தக் கூட்டணியில் இருந்து மகிழ்ச்சியுடன் பிரிந்துவிட்டேன். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.