விஜய்காந்துக்காக கடைசி வரை காத்திருந்து ஏமாந்த திமுக!
சென்னை: கூட்டணியில் இணைந்தால் மகிழ்ச்சியடைவோம்.... எங்களுடன் இணையும் என்ற நம்பிக்கை இருக்கிறது...
அழைப்பு விடுத்திருக்கிறோம்... வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது...
இந்த வார்த்தைகள் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் அடிபட்ட வார்த்தைகள். எல்லாமே தேமுதிகவை சுற்றிச் சுற்றி திமுக உதிர்த்த வார்த்தைகள்தான்.
எப்படியாவது கூட்டணியில் தேமுதிகவை இணைத்து விடவேண்டும் என்று பாகீரத முயற்சி மேற்கொண்டது திமுக. ஆனால் கடைசி நிமிடம் வரை இதோ, அதோ என்று காத்திருக்க வைத்துவிட்டு பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்து விட்டது தேமுதிக.
முதல் சந்திப்பு
"தினத்தந்தி' நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, சென்ற விஜயகாந்த், அஞ்சலி செலுத்திவிட்டு, வெளியில் கொண்டிருந்தபோது, எதிரே, காரில் கருணாநிதி வந்தார். இருவரும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரிலிருந்த, கருணாநிதிக்கு, விஜயகாந்த் வணக்கம் செலுத்த, கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார். இச்சந்திப்பு தொடர்பான, புகைப்படத்தை, தி.மு.கவே வெளியிட்டு "விஜயகாந்த், எங்கள் பக்கம் இருக்கிறார்' என்ற தோற்றத்தை, தி.மு.கவே ஏற்படுத்தியது. ஆனால், தே.மு.தி.க., தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.
பகிரங்க வரவேற்பு
தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்கு இழுத்து விடவேண்டும் என்று மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் அழைப்பு விட்டது திமுக. அதை கண்டும் காணாமல் இருப்பதாக காட்டிக்கொண்டாலும் மறைமுக பேச்சுவார்த்தையை தொடங்கியது தேமுதிக.
அழகிரியின் எதிர்ப்பு
திமுக கூட்டணியில் தேமுதிக வருவதை மு.க.அழகிரி துளி கூட விரும்பவில்லை. விஜயகாந்த் அரசியல்வாதியே அல்ல. அவருடன் கூட்டணி வைத்தால் உருப்படாது என்று பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார் அழகிரி. அதற்காக கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.
நம்பாத பிரேமலதா
திமுகவின் நடிப்பை நாங்கள் நம்ப மாட்டோம். அழகிரி நீக்கம் வெறும் நாடகம்தான் என்று பிரேமலதா பேட்டி கொடுக்கவே, தேமுதிகவை நாங்கள் அழைக்கவே இல்லை என்று திமுக தரப்பு பல்டியடித்தது.
அசராத ஸ்டாலின்
திமுக பொருளாளர் ஸ்டாலின் தன் பங்குக்கு விஜயகாந்தை இழுக்க முயற்சி செய்தார். அதற்கு அவர் முக்கியமாக நம்பியது தனது மருமகன் சபரீசனைத்தான்.
கடைசி நேர விறுவிறுப்பு
தமிழகத்தில் கூட்டணிப் பேச்சு வார்த்தை மும்முரமாக இருந்த நேரத்தில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவே தேமுதிக, திமுக இடையே கடைசி நேர விறுவிறுப்பு அரங்கேறியது.
மார்ச் 5ம் தேதி இரவு
மார்ச் 5ம் தேதி சுதீஷின் திருமண நாள். அன்றைய தினம் ஆழ்வார்பேட்டையில் நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய குடும்பத்தோடும், அக்கா பிரேமலதா, அவரது மகன்கள் சகிதமாக விருந்து சாப்பிட வந்த சுதீஷை, ஸ்டாலின் மருமகன் சபரீசன் சந்தித்துப் பேசியதாக தெரிகிறது.
12ல் 7 ஓகே
அப்போது சபரீசன், நீங்க கொடுத்த 12 தொகுதி மாமாகிட்ட கொடுத்துட்டேன். அதில் 10 ஓகேவாகிவிடும். இதுவரை 7 தொகுதிகள் ரெடி நீங்க எப்போ அறிவாலயம் வரப்போறீங்க என்றாராம் சபரீசன். அதற்கு 6ம் தேதி இரவு பதில் சொல்வதாக சொன்னாராம் சுதீஷ்.
அறிவாலயத்தில் பரபரப்பு
அதே நேரத்தில் அதாவது 5ம் தேதி கூட்டணி பற்றி பேசுவதற்கு விஜயகாந்த் அறிவாலயம் வரப்போவதாக பரபரப்பு கிளம்பவே பத்திரிக்கையாளர்களும் கட்சிக்காரர்களும் குவிந்தனர்.
அல்வா கொடுத்த விஜயகாந்த்
ஆனால் கடைசி வரை திமுகவிற்கு எந்தவிதமாக சாதகமான பதிலையும் சொல்லாமல் கூட்டணிக்காக காத்திருந்த கட்சிக்கு அல்வா கொடுத்து விட்டு பாஜக அணிக்கு பச்சை சிக்னல் காட்டி விட்டார் விஜயகாந்த்.