மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்கள் மீது போலீஸ் தடியடி நடத்துவதா? விஜயகாந்த் கண்டனம்
திருப்பூர், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடிக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய பெண்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மற்றும் மக்கள் மீது வன்முறையை ஏவிய காவலர்கள் மீதும், தமிழக டிஜிபி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருப்பூர் சாமளாபுரம் கிராமத்தில் தமிழக அரசு புதியதாக மதுபான கடை அமைப்பதற்கு அனுமதி அளித்து, அந்த பகுதியில் கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டு இருப்பதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அறவழியில் போராடிய மக்களை கலைந்து செல்லுங்கள் என்று கூட சொல்லாமல் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி, விரட்டி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
போலீசார் நடத்திய தடியடியில் ஆண்கள் தலையில் அடித்து மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது, பெண்கள் என்று பாராமல் தாறுமாறாக அடித்து இழுத்து கீழே தள்ளிவிட்ட காட்சிகளை எல்லாம் ஊடங்களில் பார்க்கும் பொழுது கண்களில் நீர் அல்ல, ரத்தமே வருகிறது. இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது நாம் என்ன ஜனநாயக நாட்டில் தான வாழ்கிறோமா என்கிற எண்ணம் தோன்றுகிறது.
காவல்துறையின் சீருடைக்கு மக்கள் மதிப்பளித்து பொறுமை காக்கிறார்கள். எனவே இனியும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் சூழல் உருவாக நேரிடும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறையினர், ஆளும் கட்சியின் ஏவல்துறையாக செயல்படுவது வேதனை அளிக்கிறது.
இனியாவது மக்களின் நியாயமான பிரச்சனைகளையும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் காவல்துறையினர் நேர்மையாக செயல்பட்டு ஜனநாயக மான்பை காப்பாற்ற வேண்டும். மேலும் பெண்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மற்றும் மக்கள் மீது வன்முறையை ஏவிய காவலர்கள் மீதும், தமிழக டிஜிபி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாக்கப்பட்ட பொதுமக்களை சந்திந்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும். காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.