தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை… உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா? விஜயகாந்த் கேள்வி
சென்னை: தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளை நடந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டலத்தில் வசித்து வந்த தேமுதிக பிரமுகர் சசிகுமாரின் வீட்டில் கடந்த வெள்ளிக் கிழமை நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் அவரது வீட்டில் மர்ம நபர்கள் வெடிகுண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர். இரண்டாவது முறையாக சசிகுமார் குறிவைத்து தாக்கப்படுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஸ்ரீபெரும்புதூர் சசிகுமார் வீட்டில் வெடிகுண்டு வீசியது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் 2 கவுன்சிலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழக மக்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாள் தோறும், கொலை, கொள்ளை, நகைப்பறிப்பு போன்ற தொடர் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு முறையான பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. இதுபோன்று அசாதாரண சூழல் தமிழகத்தில் நிலவி வருவதால் உள்ளாட்சித் தேர்தலே முறையாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.