மின் கட்டண உயர்வு.. விஜயகாந்த் நினைவுக்கு வந்த பழமொழி!
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசின் முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக கண்டித்துள்ளார். மாமியார் உடைத்தால் மண்குடம், அதுவே மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பழமொழிதான் தனக்கு நினைவுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசு மின் கட்டணத்தை ரூ.6,805 கோடிக்கு உயர்த்த உத்தேசித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 30 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்படும்.
ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் மானியம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஏழை, எளிய என்பதற்கு எந்த வரைமுறையை வைத்து அளவீடு செய்யப்போகிறார். சாதாரண நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களே 2 மாதத்திற்கு ஒருமுறை 500 யூனிட்டுக்கு மேல் உபயோகப்படுத்துகிறார்கள்.
மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ளவற்றில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என எதிர்ப்பு தெரிவித்து கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் மட்டும் பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் என அனைத்திலும் கட்டண உயர்வை அமல்படுத்தும் போது அதே பொதுமக்கள் பாதிக்கப்படுவது தெரியவில்லையா?
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது.
எனவே, ஒட்டுமொத்த மின் கட்டண உயர்வில் இருந்து தமிழக மக்களை காக்கும் வகையில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலை என அனைத்து தரப்பினருக்கும் உயர்த்த உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்திட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.