நா. முத்துக்குமாரின் மரணத்தால் வேதனை அடைகிறேன்.. விஜயகாந்த்
சென்னை: பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல தி. க. தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழ் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்து பல விருதுகளையும், இரண்டு தேசிய விருதை பெற்ற நா.முத்துக்குமார், நான் நடித்த விருதகிரி, சகாப்தம் படங்களுக்கும் பாடல்களும் எழுதியுள்ளார். இன்று காலை (14.08.2016) காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் திரையுலகினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் முத்துக்குமார் - கி.வீரமணி
கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
வளர்ந்து வரும் இளம் கவிஞர் நா.முத்துக்குமார் மறைந்தாரே!
தமிழ்த் திரைப்பட உலகில் அண்மைக் காலத்தில் அனைவரின் கவனத்தையும் தமது அழுத்தமான கருத்துச் செறிந்த பாடல் வரிகளால் ஈர்த்த கவிஞர் நா.முத்துக்குமார் (வயது 41) மறைந்த செய்தி அறிந்து திடுக்குற்றோம். இன்னும் எவ்வளவோ சாதனைகளை படைக்க வேண்டிய ஒருவரை நாம் இழந்திருப்பது வேதனைக்குரியது.
மாணவர் பருவம் தொட்டு பெரியார் திடலோடு அணுக்கமான தொடர்பு கொண்டவர். கழகப் பிரச்சார பாடல்களை எழுதிக் கொடுத்தவர். தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, கழகத்தால் பெரியார் விருதும் பெற்ற இளந்தமிழர் ஒருவர் மறைந்தது தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும். அவரிடம் பாடம் பயின்று உடல் நலனை ஓம்புங்கள் என்று அனைத்து தமிழர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் திரை உலகினர்க்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறந்த கவிஞரும், பாடாலசிரியருமான நா. முத்துக்குமார் மறைவு செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த நா. முத்துக்குமார், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கி, சிறந்த பாடலாசிரியராக வளர்ந்தார். தங்கமீன்கள் திரைப்படத்தில், மகளுக்கும் - அப்பாவுக்குமான உறவை பாடல்களில் வடித்தெடுத்த அவருக்கு 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடலுக்காக தேசிய விருது கிடைத்தது. சைவம் திரைப்படத்தில் அழகே எங்கும் நிறைந்திருக்கிறதென்ற 'அழகே, அழகே' பாடலுக்காக இரண்டாவது முறை தேசிய விருது பெற்றார்.
திரைப்பாடல்கள் மூலமும், கவிதைகள் மூலமும் கலை உலகில் நீங்கா இடம்பெற்ற நா.முத்துக்குமார் இளம் வயதில் மரணித்திருப்பது ஆழ்ந்த வருத்தம் தருகிறது. அவரது இணையர் தீபலஷ்மி, குழந்தைகள், குடும்பத்தார், நண்பர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.