விஜயகாந்த்தால் தஞ்சாவூரில் பதற்றம்- ஜெ. படம் கிழிப்பு- தேமுதிகவினரை துவைத்தெடுத்த அதிமுகவினர்!!
தஞ்சாவூர்: தே.மு.தி.க. தலைவர் எங்கே போனாலும் நிதாமனற்ற பேச்சு, செயல்களால் பதற்றமான நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. தஞ்சாவூரில் முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவிட பதிலடியாக தேமுதிக பேனர்கள், கொடிகளை அதிமுகவினர் எரித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற மரியாதைக்குரிய பொறுப்பு வகித்தாலும் அதற்கு மரியாதை அளிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசுவது, அடிப்பது, அநாகரிகமாக நடந்து கொள்வது என நிதானமற்ற நிலையில் உச்சத்தில் செயல்படுகிறார் விஜயகாந்த். இதனால்தான் சென்னையில் பத்திரிகையாளர்களை ..த்தூ.... என காறி உமிழ்ந்தார் விஜயகாந்த்.
இதேபோல் இன்று தஞ்சாவூரில் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஏனோ நிலைதடுமாறி, பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஜெயலலிதா படம் இருக்கிறது.. அதை கிழிங்கடா என சொல்ல.. அவரது அடிப்பொடிகளும் அந்த படத்தை கிழித்து எறிந்தனர். இந்த செய்தியை கேள்விபட்ட அதிமுகவினர் அங்கு திரண்டனர்.
தேமுதிகவின் ஆர்ப்பாட்டத்துக்கான பேனர், கொடிகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கிழித்து தீ வைத்து எரித்தனர் அதிமுகவினர். தடுக்க வந்த போலீசாரை விரட்டிவிட்டு தேமுதிக கொடிகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூரில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் விஜயகாந்த் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது; மீத்தேன் திட்டத்துக்கு காரணமே கருணாநிதி அரசுதான் என்று வழக்கம்போல வசைபாடினார்.
கும்பகோணத்தில் அடி உதை
இதனிடையே ஜெயலலிதா படம் கிழிக்கப்பட்ட செய்தி காட்டுத் தீயாக பரவ, கும்பகோணத்தில் தேமுதிகவினர் சென்ற வாகனத்தை அதிமுகவினர் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் படுகாயமடைந்தனர்.