எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து, 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், வெற்றி பெற்ற ஓராண்டுக்குள்ளாகவே, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜன் மற்றும் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் தொடக்கக் கால உறுப்பினராக இருந்து திட்டக்குடி எம்.எல்.ஏ-வாக ஆன தமிழழகன் ஆகியோர் முதல்வரை 2013-ம் ஆண்டு சந்தித்தனர்.
தொகுதி பிரச்சினைக்காக முதல்வரை சந்தித்ததாக கூறிய அவர்கள், தேமுதிக தலைமையை விமர்சித்தனர். அன்று முதல் அவர்கள் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாகவே இருந்து வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பேராவூரணி எம்எல்ஏவான நடிகர் அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் சாந்தி, செங்கம் சுரேஷ்குமார், விருதுநகர் மாஃபா பாண்டியராஜன் என்று அடுத்தடுத்து எம்.எல்-ஏக்கள் முதல்வரைச் சந்தித்து அதிமுக ஆதரவாளராக மாறினர். திருத்தணி எம்.எல்.ஏ. அருண் சுப்ரமணியமும் சென்றாண்டு முதல்வரைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினார்.
தேமுதிக அவைத் தலைவராக இருந்தவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் இதில் முக்கியமானவர். ஆனால் இவர் தேமுதிகவை விட்டு விலகியதுமே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ஆனால், மற்ற தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாகவே செயல்பட்டு வந்தனர்.
சட்டசபை உறுப்பினர்கள் தேர்தல் வெற்றிக்குப் பின் வேறு கட்சிக்கு மாறினால், அவர்களது பதவி பறி போகும். இதனாலேயே தொடர்ந்து அவர்கள் தேமுதிகவிலேயே இருந்து வந்தனர்.
இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிரடியாக இன்று அந்த 8 தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு மட்டுமே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கிடைக்கும். அந்தவகையில், சட்டசபையில் 29 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் பதவி வகித்து வந்தார்.
ஆனால், அதிரடியாக இன்று 8 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதால், சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 20 ஆக மாறியுள்ளது. இதனால் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் இழந்துள்ளார். இதனை சபாநாயகர் தனபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி கிடையாது:
மேலும், தமிழக சட்டசபையில் தற்போது எந்த ஒரு கட்சிக்கும் 24 உறுப்பினர்கள் கிடையாது, எனவே எந்தஒரு உறுப்பினரையும் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலை எந்தவித பதவியும் இல்லாமல் எதிர்கொண்டதைப் போலவே, இம்முறைத் தேர்தலையும் வெறும் கட்சித் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமே விஜயகாந்த் எதிர்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.