பால் வளத்துறை அமைச்சர் யார்னு கூட தெரியலை.. ‘கேப்டனை’ போட்டுத் தாக்கிய ராஜேந்திர பாலாஜி
பால் வளத் துறை அமைச்சர் யார் என்று கூட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெரியவில்லை என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக தாக்கியுள்ளார்.
சென்னை: பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டி வருகிறார். அவரை கிண்டல் அடித்து விஜயகாந்த் அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் பால் வளத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என்று குறிப்பிட்டிருக்கிறார். பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்று கூட தெரியாமல் ஒரு கட்சி தலைவராக விஜயகாந்த் செயல்பட்டு வருவது தமிழகத்தில் உள்ள அனைவரும் கிண்டல் செய்து வந்தனர்.
இவர் எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்றும், அடிக்கடி எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததை பெருமையாக பேசிக் கொள்கிறார் என்றும் பலரும் விஜயகாந்தை வாட்டி வதைத்தனர்.
முதல்வருடன் சந்திப்பு
இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாலில் ரசாயனம் கலக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வரிடம் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து தெரிவித்தார்.
50% நிறுவனங்களில் கலப்படம்
தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தனியார் பால் நிறுவனங்கள் கலப்படத்தில் ஈடுபடுகின்றன.
தவறு செய்யும் பால் நிறுவனங்கள் இனிமேல் தமிழகத்தில் செயல்பட முடியாது என்று அமைச்சர் கூறினார்.
எச்சரிக்கை
மேலும், மக்களுக்கு தரமான பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். மக்களுக்கு இது தொடர்பான எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்படும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விஜயகாந்த்தை கிண்டலடித்த அமைச்சர்
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், தனியார் நிறுவனங்களை ராஜேந்திர பாலாஜி மிரட்டுகிறார் என்று விஜயகாந்த் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு, பால்வளத் துறை அமைச்சர் யாரென்றே தெரியாத விஜயகாந்த் என்று கிண்டலடித்து சிரித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.