மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ்... குடும்பத்தோடு அனல் பறக்கப் பிரசாரம் செய்யத் தயாராகிறார் விஜயகாந்த்
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த தெம்போடு சூறாவளி சுற்றுப்பயணத்திற்குத் தயாராகி வருகிறாராம் விஜயகாந்த். அவருடன் பிரேமலதா விஜயகாந்த்தும் 11 நகரங்களில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்தின் பிரசாரம்தான் முதலில் தொடங்குகிறதாம். பின்னர் விஜயகாந்த் இணைந்து கொள்கிறாராம். இருவரும் தனித் தனியாக பிரசாரம் செய்து 234 தொகுதிகளிலும் கவர் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
மேலும் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷும் இந்த முறை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாராம். அவரும் ஊர் ஊராகப் போய் பேசப் போகிறாராம்.
சூறாவளி பிரசாரம்
இந்த முறை தனது பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. குறிப்பாக தனது வாக்கு வங்கி கரையவில்லை என்று காட்டியாக வேண்டிய நிலையில் உள்ளது.
லோக்சபா தேர்தலில் பேச உதவும்
இதில் தனது பலத்தையும், வாக்கு வங்கியையும் அது நிரூபித்தால்தான் லோக்சபா தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி பேசுவதற்கு உதவும் என்பதால் அதில் தேமுதிக தற்போது கவனமாக உள்ளது.
அனல் பறக்கும் பேச்சுக்கள்
இந்தப் பிரசாரத்தின்போது பிரேமலதாவின் பேச்சில் அனல் பறக்கும் என்று தெரிகிறது. ஜெயலலிதாவை அவர் அல்லி ராணி என்று ஆவேசமாக கூப்பிட்டு வருகிறார். திமுகவை தில்லு முல்லு கட்சி என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டம் வரும்
தேமுதிக தவிர மேலும் நான்கு கட்சிகள் தற்போது கூட்டணியாக இணைந்திருப்பதால் கடந்த சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை விஜயகாந்த், பிரேமலதா கூட்டங்களுக்கு நல்ல கூட்டம் வரும் என்று தெரிகிறது.