மீதமுள்ள கட்சியினரை தக்க வைக்க ‘நமக்கு நாமே’ பாணியில் நடையாய் நடக்கப் போகும் கேப்டன்!
சென்னை: கரைந்து வரும் தேமுதிகவைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக, மாநிலம் முழுவதும் ஸ்டாலினின் நமக்கு நாமே பாணியில் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளாராம் விஜயகாந்த்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிரடியாக அரசியலில் களமிறங்கியவர் விஜயகாந்த். மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை தேமுதிக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெளிப்பட்டது.
ஆனால், விஜயகாந்தின் நடவடிக்கைகள், அடுத்தடுத்து அவரது தவறான முடிவுகள் போன்றவை தேமுதிகவின் செல்வாக்கை தவிடு பொடியாக்கியது.
படுதோல்வி...
கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்கும் என அக்கட்சித் தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், மக்கள் நல கூட்டணியுடன் கை கோர்த்து, படுதோல்வி அடைந்தார் விஜயகாந்த். தோல்வியைத் தொடர்ந்து கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது.
அதிருப்தி...
ஆனாலும், அக்கட்சியினரின் வெளியேற்றம் நிற்கவில்லை. தொடர்ந்து அதிருப்தி காரணமாக தேமுதிகவில் இருந்து கட்சியினர் வெளியேறி பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல்...
இந்த சூழ்நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது கட்சியினரிடையே மேலும் அதிருப்தியை அதிகரித்துள்ளது. எனவே, மீதமுள்ள கட்சியினரைத் தக்க வைக்க விஜயகாந்த் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறார்.
ஆலோசனை...
அதன் ஒருகட்டமாக காலியாக உள்ள 18 மாவட்டங்களுக்கும் செயலர்களை நியமித்திருக்கிறார். அதேபோல், உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களையும், மாவட்ட செயலர்களையும் அழைத்துப் பேசவும் அவர் முடிவு செய்துள்ளார்.
நமக்கு நாமே...
இது ஒருபுறம் இருக்க திமுக பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாணியில் கட்சித் தொண்டர்களை நேரில் சந்திக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தமிழகம் முழுவதும் விரைவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே தேய்ந்து வரும் தேமுதிகவைக் காப்பாற்ற முடியும் என்பது விஜயகாந்தின் எண்ணமாம்.