அடிச்சு தூக்குடா அந்த ஆளை.. கூச்சல் போட்ட தொண்டரை மிரட்டிய விஜயகாந்த்.. வீடியோ
உளுந்தூர்பேட்டை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, கூச்சல் போட்ட தொண்டரை பார்த்து மிரட்டினார். சத்தம் போடுற அந்த ஆளை அடிச்சு தூக்குடா என்று கூறினார்.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தொகுதிக்குட்பட்ட செம்மனங்கூர், ஆரணி மற்றும் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
ஒரு சில ஊடகங்களில் வெளியான கருத்துக்கணிப்புகளில் விஜயகாந்துக்கு இழுபறி நிலை நீடிப்பதாகவும், சில கருத்துக்கணிப்புகளில் விஜயகாந்த் தோல்வியடைவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே விஜயகாந்த் பேசினார்.
நான் ஜெயிப்பது உறுதி
உளுந்தூர்பேட்டை தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி மக்களை ஏமாற்றி வருகின்றன. எனது தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நேர்மையான ஆட்சியை கொடுப்போம்.
பொய்யான கருத்துக்கணிப்பு
உளுந்தூர்பேட்டை தொகுதியில் நான் வெற்றிபெற்றதும், பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து தமிழகத்திலேயே சிறந்த தொகுதியாக மாற்றுவேன். ஊடகங்கள் அனைத்தும் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்தை திணிக்கிறார்கள். ஒரு சில ஊடகங்கள் தி.மு.க.வுக்கு சாதகமாகவும், ஒரு சில ஊடகங்கள் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவும் கருத்து கணிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.
காப்பி தேர்தல் அறிக்கை
அனைத்து கிராமங்களிலும் ரேஷன் கடை கட்டிக் கொடுப்பேன். குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் காப்பி அடித்துள்ளன.
கெஜ்ரிவால் போல ஜெயிப்பேன்
டெல்லி சட்டசபை தொகுதியில் கெஜ்ரிவால் தோற்று விடுவார் என்று கருத்து கணிப்புகளை வெளியிட்டனர். ஆனால் அவர் வெற்றிபெற்றார். பீகாரில் லாலுபிரசாத் தோற்றுவிடுவார் என்று கருத்து கணிப்பில் கூறினார்கள். அவரும் வெற்றிபெற்றார். அதுபோல தமிழகத்தில் எங்களது கூட்டணி தோல்வி அடைந்து விடும் என்று கருத்து கணிப்புகளை கூறுகிறார்கள். ஆனால் அது நடக்காது. கருத்து கணிப்புகளை பொய்யாக்கி நாங்கள் வெற்றி பெறுவோம்.
நல்லாட்சி தருவோம்
எனது தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலை மாறும். ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமையும். நாங்கள் 6 கட்சி கூட்டு, எதிரிகளுக்கு வைக்கப்போகிறோம் வேட்டு. நாங்கள் வைத்துள்ள கூட்டணியில் 6 கட்சி தலைவர்கள் உள்ளனர். நாங்கள் ஆறுமுகம், ஆறுமுகத்துக்கு எப்போதும் ஏறுமுகம் தான். எனவே மக்களே கவலைப்படாதீர்கள். எங்கள் கூட்டணி வெற்றிபெறும். நல்லாட்சி தருவோம்.
அடிச்சு தூக்குடா அந்த ஆளை
தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த விஜயகாந்தை ஒரு தொண்டர் போட்ட கூச்சல் தொந்தரவு செய்தது. அப்போது கையை நீட்டி அமைதியாக இருக்குமாறு கூறினார். அப்படியும் சத்தம் நிற்காமல் போகவே அடிச்சு தூக்குடா அந்த ஆளை என்று கூறினார். எத்தனை தடவைதான் சொல்றது... கம்முன்னு இருக்கணும் என்னா? என்று கூறினார் விஜயகாந்த்.