ஆந்திர என்கவுண்டரில் பலியான 7 பேர் குடும்பத்திற்கு ரூ. 50,000 நிதியுதவி... விஜயகாந்த் வழங்கினார்!
தர்மபுரி: ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரின் குடும்பத்துக்கு, தேமுதிக சார்பில் தலா ரூ. 50 ஆயிரத்தை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வழங்கினார்.
ஆந்திராவில் திருப்பதி வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். தற்காப்புக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என ஆந்திர அரசு கூறினாலும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட என்கவுண்டர் என பலியானவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களில் 7 பேர் தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலை கிராமத்தை சேர்ந்தவர்கள். அரூர் அடுத்த அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த அந்த 7 பேரின் குடும்பத்தினரையும் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேமுதிக சார்பில் ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவியை விஜயகாந்த் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், "வன உயிரினங்களை கொல்லவே அனுமதி இல்லாதபோது மனிதர்களை கொல்வதா? ஆடு,மாடுகளை வெட்டவே தடை போட்டிருக்கும் போது மனிதர்களை சுட்டுத்தள்ளுகிறார்களே.
தமிழகத்தில் 85 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி இருக்கிறார்கள். வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தால் படுகொலைகளை தடுத்திருக்கலாம்''என்றார்.