உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் இழந்த விஜய்காந்த்.. 3வது இடத்துக்கு தூக்கி அடித்த மக்கள்
விழுப்புரம்: விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக-மக்கள் நல கூட்டணி முதல்வர் வேட்பாளரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தோல்வி அடைந்துள்ளார். இவர் 34,447ஓட்டுகள் மற்றுமே பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கை விட அதிக வாக்குகள் பெறாத காரணத்தால் அவர் டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விஜயகாந்த் இருந்து வந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு கடைசியில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் விஜயகாந்துக்கு 3வது இடம்தான் கிடைத்தது.
2005ம் ஆண்டு தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த், 2006ம் ஆண்டுதான் முதல் சட்டசபைத் தேர்தலை சந்தித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் சந்தித்த தேர்தல் அது. 234 தொகுதிகளிலும் அவரது கட்சி தனித்துப் போட்டியிட்டது. கணிசமான வாக்குகளைப் பெற்று பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தனது முதல் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் விஜயகாந்த். அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் விஜயகாந்த். ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றதோடு தேமுதிகவைச் சேர்ந்த 29 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்று எதிர்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
உளுந்தூர்பேட்டை மூன்றாவது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணி, தமகா உடன் இணைந்து முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார். இம்முறை உளுந்தூர்பேட்டை தொகுதியில் களமிறங்கினார்.
பலமான போட்டி
இந்த தொகுதியில் அதிமுக, திமுக, பாமக, நாம்தமிழர், பாஜக என பலமுனை போட்டி நிலவுவதோடு பலமான வேட்பாளர்களும் விஜயகாந்துக்கு எதிராக நிறுத்தப்பட்டனர்
விருத்தாச்சலம் வெற்றி
2006 சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த்துக்கு 61,337 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற பாமகவின் கோவிந்தசாமிக்கு 47,560 வாக்குகள் கிடைத்தன.
ரிஷிவந்தியத்தில் 2வது வெற்றி
2011ல் நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற விஜயகாந்த், இந்த முறை ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸ் கட்சியின் கடுமையான போட்டியையும் தாண்டி அதிமுக பலத்தால் அவர் எளிதான வெற்றியைப் பெற்றார்.
வாக்குகள் எவ்வளவு
ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்துக்குக் கிடைத்த வாக்குகள் 91,164 ஆகும். எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கு 60,369 வாக்குகளே கிடைத்தன.
அதிமுக வெற்றி
உளுந்தூர்பேட்டை அதிமுக வேட்பாளர் குமரகுரு 81,973 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் வசந்தவேல் 77,809 வாக்குகளும், விஜயகாந்த் 34,447 வாக்குகளும் பெற்றனர். பாமக வேட்பாளர் பாலு 20,23 வாக்குகளை பெற்றார்.
டெபாசிட் காலி:
உளுந்தூர்பேட்டையில் பதிவான மொத்த வாக்குகள் 1,96,252 இதில் 6ல் ஒரு பங்கைவிட ஒரு வாக்கு அதிகம் பெற்றிருந்தால் வேட்பாளர் வைப்புத்தொகையான டெபாசிட்டை பெறுவார். விஜயகாந்த் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறவில்லை என்பதால் அவர் தனது டெபாசிட் தொகையை பறிகொடுத்தார்.
பாமக பரிதாபம்:
உளுந்தூர்பேட்டையை விஜயகாந்த் டெபாசிட்டை பறிகொடுப்பார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால் அது தலைகீழாகியுள்ளது. அதாவது இந்த தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பாலு பரிதாபகரமான முறையில் தோல்வியடைந்த தோடு வெறும் 20,223 வாக்குகளை மட்டுமே பெற்றதோடு டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார்.