தேசிய விருது வென்றவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து
சென்னை: தேசிய திரைப்பட விருது பெற்ற மயில்சாமி அண்ணாதுரை, இளையராஜா, சமுத்திரகனி உள்ளிட்டோருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானியும், மறைந்த டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வழித்தோன்றலாகவும், கருதப்படுகின்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பதைக்கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
34 ஆண்டுகளாக விஞ்ஞானத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அவரது அயராத முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த விருது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இந்தியாவின் 63-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது விசாரணை படத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே விசாரணை திரைப்பட குழுவிற்கும், சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், சிறந்த துணைநடிகருக்கான விருது இயக்குனர் சமுத்திரகனிக்கும், சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதாக "இறுதிச்சுற்று" படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்கிற்கும், அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாகுபலி படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் சிறந்த எடிட்டருக்கான விருது மறைந்த கிஷோர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நம்மிடையே இல்லை என்றாலும், அவரது குடும்பத்தாரின் மனக்காயத்திற்கு இந்த விருது ஒரு மருந்தாக அமையும் என்று நம்புகிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.