குடியரசு தினத்தில் உண்மையான ஜனநாயகம் மலரட்டும் - விஜயகாந்த் வாழ்த்து
சென்னை: குடியரசு தினத்தில் உண்மையான ஜனநாயகம் மலரட்டும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமையட்டும், மக்கள் துன்பங்கள் ஏதுமின்றி மகிழ்வுடன் வாழட்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
"மக்கள் தாங்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில், மக்களுக்காக மக்களால் அமைக்கப்பட்ட மக்களாட்சிதான் குடியாட்சியாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, மக்களாட்சி மலர்ந்ததை நினைவு கூறும் வகையில், 1950ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளை இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
வெள்ளையர்களின் அடக்குமுறையை அகிம்சை வழியிலும், புரட்சிகள் மற்றும் பல்வேறு போராட்டங்கள் மூலம் சுதந்திர இந்தியாவை நாம் பெற்றுள்ளோம். இந்திய நாட்டை வெள்ளையர்களிடமிருந்து மீட்டு, ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தேசத்தலைவர்களையும், தியாகிகளையும் நினைவு கூர்ந்து, நாட்டிற்காக தன்னுயிரை கொடுத்த அவர்களைப் போற்றவேண்டும்.
இந்தியாவில் மக்களாட்சி ஏற்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடியும், லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்படவில்லை. வறுமைக்கோட்டிற்கு கீழே, ஒருவேளை உணவின்றி வாழும் நிலையும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அளிப்போம் என்று புரட்சி கவி பாரதியார் பாடியுள்ளார். ஆனால் உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
வறுமை, வறட்சி, நஷ்டம், கடன் தொல்லை, போன்ற காரணங்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடியும் சூழலில் அவர்கள் வாழ்க்கை, இனிவரும் காலங்களில் மகிழ்ச்சியானதாக மாற்றவேண்டியது இந்தியர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை. அதே போல் ஜாதி, மதம், இனம், மொழி என்று எந்த பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே உணர்வோடு ஒற்றுமையாக இருப்பது அவசியம்.
நம் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் நம் கலாச்சாரத்திற்காக, மொழிக்காக, உயிர், உடமையை கூட இழப்பார்கள், ஆனால் தங்கள் உரிமைகளை யாருக்காகவும் இழக்கமாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளனர். இந்த குடியரசு தினத்தில் உண்மையான ஜனநாயகம் மலரட்டும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமையட்டும், மக்கள் துன்பங்கள் ஏதுமின்றி மகிழ்வுடன் வாழட்டுமென அனைவருக்கும் எனது உளம்கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.