வெயிலில் வாடும் மக்களுக்கு இளநீர்..மோர்..தண்ணீர் வழங்குங்கள்.. தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
கோடை காலம் ஆரம்பித்துவி்ட்டதால் பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்குமாறு தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: கோடையில் வாடும் மக்களுக்கு உதவ ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்குமாறு தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கோடைகாலம் துவங்கி இருக்கும் நிலையில் கோடையின் உச்சிவெயிலை நினைவுபடுத்தும் அளவிற்கு, இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. எனவே தமிழக மக்கள் இந்த கோடைகாலத்தை சமாளிப்பதற்கு தே.மு.தி.க. சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும்.
ஆண்டு தோறும் நம்முடைய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம். அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம் ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்ப்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.