அடிக்கிற கைதான் அணைக்கும்.. பொது மேடையில் பாதுகாவலருக்கு விசிறி விட்ட விஜயகாந்த்!
மதுரை: பொதுக்கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு கொடுத்த பாதுகாவலருக்கு விஜயகாந்த் விசிறி விட்ட சம்பவம் கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் நேற்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவரை பேசவிடாமல் தொண்டர்கள் கூச்சலிட்டு கொண்டே இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் நாக்கை துருத்தியபடி ஆவேசமாக தொண்டர்களை எச்சரித்தார்.
ஆனால், அதே மேடையில்தான் விஜயகாந்த் சாந்த சொரூபியாக ஒரு காரியத்தையும் செய்தார். விஜயகாந்த் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, பாதுகாப்புக்காக அவரது முன்னால் சஃபாரி அணிந்த ஒரு பாதுகாவலர் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார்.
விஜயகாந்த் தனது கையில் வைத்திருந்த காகிதத்தை வைத்து, அந்த பாதுகாவலருக்கு விசிறி விட்டார். திடீரென விஜயகாந்த் இவ்வாறு செய்ததை பார்த்த பாதுகாவலர், அசடு வழிய விஜயகாந்த்தை பார்த்து சிரித்தார்.
விசிற வேண்டாம் என்றால் விஜயகாந்த் கோபப்பட்டுவிடுவாரோ என நினைத்து பாதுகாவலர் விஜயகாந்த்தையும், பொதுமக்களையும் மாறி, மாறி சிரித்தபடி இருந்தார்.
இதை பார்த்த கட்சி தொண்டர்கள் கலகலவென சிரித்தனர். அதோடு விடவில்லை விஜயகாந்த். தனது இருக்கைக்கு சற்று தொலைவில் அமர்ந்திருந்த இன்னொரு பாதுகாவலருக்கும் விசிறி விட்டு அவரது டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார். அந்த பாதுகாவலரும் நெளிந்தார்.
இப்படியாக பாதுகாவலர்களை வைத்து, விஜயகாந்த் காமெடி செய்து கொண்டிருந்ததால், அவரது கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் கலகலவென சிரித்து பொழுது போக்கிக்கொண்டனர். சேலத்தில் சமீபத்தில் தனது பாதுகாவலரை விஜயகாந்த் அடித்தது நினைவுகூறத்தக்கது.