வாக்கு வாங்கி ஏன் குறைஞ்சிருச்சு?....TA, DA கொடுத்து நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசித்த விஜயகாந்த்!
சென்னை: தேமுதிகவின் அட்டகாசமான வாக்கு வங்கி ஏன் இந்த சட்டசபைத் தேர்தலில் 2.4 சதவீதமாக குறைந்தது என்று கட்சியினரிடம் ஆலோசித்து வருகிறார் கட்சித் தலைவர் விஜயகாந்த். கட்சி நிர்வாகிகளை கட்சித் தலைமைக் கழக அலுவலகத்தில் சந்தித்து நேற்று முதல் 20ம் தேதி வரை ஆலோசிக்கிறார்.
தேமுதிக மிகப் பெரிய அடியை வாங்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. பீனிக்ஸ் பறவை போல வருவேன் என்று விஜயகாந்த் கூறினாலும் கூட கட்சியினர் மத்தியில் வந்தாலும் மறுபடியும் நம்மால் பறக்க முடியுமா என்ற சந்தேகம் இருப்பதையும் காண முடிகிறது.
இந்த நிலையில் கட்சியினருடன் மீண்டும் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார் விஜயகாந்த். நேற்று முதல் 2வது கட்ட ஆலோசனை தொடங்கியுள்ளது. நேற்று சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். 20ம் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் தொடரவுள்ளது.
சக்தி டூ சகதி!
தேமுதிகவின் வாக்கு வங்கி ஆரம்பத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்தது. அதாவது 10 சதவீத அளவுக்கு இருந்தது.. இதனால் தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது. ஆனால் தற்போதைய சட்டசபைத் தேர்தலில் 2.4 சதவீதமாக அடியோடு குறைந்து சகதியாக மாறி விட்டது.
எப்படி எப்படி
இவ்வளவு பெரிய சக்தியாக இருந்தோமே எப்படி ஒரே தேர்தலில் நாம் சரிந்தோம் என்று தெரியாமல் தேமுதிகவினர் விழித்துக் கொண்டுள்ளனர். அவர்களது வாக்கு வங்கி இவ்வளவு கேவலமாக போய் விட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
கூட்டணியே காரணம்
இதுகுறித்துத்தான் தற்போது கட்சி நி்ர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் கருத்து கூறும் பலரும் கூட்டணி சரியில்லை என்ற காரணத்தையே முக்கியமாக கூறியுள்ளனர்.
கட்சி செலவில்
இந்தக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றி, நகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் கோயம்பேடு வந்து, திரும்புவதற்கான செலவையும், தங்குமிடம், சாப்பாடு உள்ளிட்ட செலவுகளையும் விஜயகாந்த்தே ஏற்றுக் கொண்டாராம்.
என்னென்ன கேள்விகள்?
கட்சி நிர்வாகிகளிடம், மக்கள் நலக் கூட்டணியுடன் வைத்துள்ள உறவைத் தொடருவதா அல்லது வெளியேறுவதா?. வாக்கு வங்கி வெகுவாக 2.4 சதவீதம் அளவுக்கு குறைந்தது ஏன்? மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற கேள்விகளை முக்கியமாக விஜயகாந்த் கேட்கிறாராம்.
தனித்துப் போட்டியிட முடிவு
மேலும் இக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் நாம் கண்டிப்பாக தனித்து களம் காண்போம். 11 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடக்கும். ஒவ்வொரு நாளும் மாவட்ட செயலாளர்களை தவிர 250 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்பார்கள். உங்களின் எண்ணங்களுக்கேற்ப தேமுதிக எதிர்கால நடவடிக்கைகள் அமையும். கட்சி வளர்ச்சிக்கு உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்குங்கள் என்று கூறினாராம் விஜயகாந்த்.