குடிக்கிறது பெரிய தப்பா... அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள்? - விஜயகாந்த் கேள்வி
சென்னை: குடிக்கிறேன் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். யாருமே இங்கு குடிக்கவில்லையா? குடிக்கிறது பெரிய தப்பா என்ன? அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுவதும் கடையை திறந்து வச்சிருக்கீங்க", என்று கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் விஜயகாந்த் வீட்டில் நடந்தது.
இந்த விழாவில் மகனை அறிமுகப்படுத்திவிட்டு விஜயகாந்த் பேசியதாவது:
இது அரசியல் விழா அல்ல; இருந்தாலும் சொல்கிறேன், சில பேர் ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு இங்கு வராமல் இருக்கிறார்கள். வாழ்த்தியவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சண்முக பாண்டியன்
சினிமாவுக்காக பெயரை மாற்றிக்கொள்ள போகிறாயா என்று மகனிடம் கேட்டேன். இந்தப் பெயரே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். எனக்கு முருகன் பிடிக்கும்; மேலும் மதுரையை நினைவுபடுத்தும் விதமாகவும் சண்முக பாண்டியன் என்று இளைய மகனுக்கு பெயர் வைத்தோம்.
என் தலைவன் பிரபாகரன்
கேப்டன் பிரபாகரன் படத்தில்நடித்ததால் என்னுடைய முதல் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கவில்லை. என்னுடைய தலைவர் பிரபாகரனை மனதில் வைத்துதான் விஜயபிரபாகரன் என்று பெயர் வைத்தேன்.
எனக்கு பயமில்லை
ஏற்காடு தேர்தலில் பயந்து கொண்டு நான் போட்டியிடவில்லை என்று சொல்கிறார்கள். தொண்டர்கள் இருக்கும்வரை எனக்கு பயமில்லை.
டெல்லி தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கோபமான மனிதர் என்று பெருமைப்படுகிறார்கள். நான் கோபப்பட்டால் மட்டும் குறை கூறுகிறார்கள்.
என் பசங்க மாதிரி..
நான் ரோட்டில் போகிறவர்களையெல்லாம் அடிப்பது கிடையாது. என் தொண்டர்களைத்தான் பேசுகிறேன்; அடிக்கிறேன். அவர்களை என் வீட்டுப் பசங்க போலவே பாவிக்கிறேன். அதனால் அப்படி நடந்துகொள்கிறேன். அதனால் அப்படி செய்கிறேன்.
நான் மட்டும்தான் குடிக்கிறேனா?
குடிக்கிறேன் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். யாருமே இங்கு குடிக்கவில்லையா? குடிக்கிறது பெரிய தப்பா என்ன? அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுவதும் கடையை திறந்து வச்சிருக்கீங்க?", என்றார்.