'கேப்டன்' பட்டப் பெயரை இழக்கிறார் விஜயகாந்த்? - தடை கோரி உள்துறைச் செயலருக்கு கடிதம்!!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவிலேயே அவருக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப்படும் கேப்டன் என்ற பட்டப் பெயரை இழக்கவிருக்கிறார்.
ராணுவ பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், 'கேப்டன்' என்ற அடைமொழியை சினிமாக்காரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயகாந்த் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலருக்கு, முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் கோவிந்தராஜ் கடிதம் அனுப்பி உள்ளார்.
எனவே இந்த பட்டப் பெயரை இனியும் விஜயகாந்தால் பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
எப்படி வந்தது இந்த கேப்டன்?
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கிய 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தார். வனத்துறை அதிகாரி வேடம் அவருக்கு. அந்தப் படம் அவருக்கு 100வது படம் வேறு. படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அவரை கேப்டன் என்றே அழைக்க ஆரம்பித்தனர். அவரும் அதை ரொம்ப விரும்பினார்.
கட்டாய 'கேப்டன்'
ஆரம்பத்தில் விஜயகாந்துக்குப் பட்டம் புரட்சிக் கலைஞர் என்பதுதான். ஆனால் அதைவிட இந்த கேப்டன் நன்றாக இருப்பதாக எல்லோரும் ஏற்றிவிட, விஜயகாந்தும் அப்படியே அழைக்கச் சொல்லிவிட்டார். கட்சியின் போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களில் கூட கேப்டன்தான்.
தே.மு.தி.க.,வின் இணையதளம், விஜயகாந்தின், 'பேஸ்புக்' போன்றவற்றிலும், கேப்டன் என்ற அடைமொழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதெப்டி பயன்படுத்தலாம்?
ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே இந்த கேப்டன் என்ற அடை மொழியை பயன்படுத்த முடியும். அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் ஆகியோர் பயன்படுத்த முடியாது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேப்டன் என்ற பட்டப் பெயரை பயன்படுத்த தடை கோரியும் காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ், தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
சட்டப்படி தவறு
இதுகுறித்து அவர் கூறுகையில், 'தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கேப்டன் என்ற அடைமொழியை, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இது, அரசியல் சட்டத்துக்கு முரணானது. 1950ல், இயற்றப்பட்ட ராணுவ சட்டத்தின் பதவி மற்றும் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்தப்படுத்துவதை தடை செய்யும் பிரிவின் படி, ராணுவ அதிகாரிகளே, 'கேப்டன்' என்ற அடைமொழியை பயன்படுத்த முடியும். சாதாரண குடிமக்கள் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தடை விதியுங்கள்...
ஆனால், அரசியல் கட்சித் தலைவரான விஜயகாந்த், 'கேப்டன்' என்ற அடைமொழியை பயன்படுத்துவது, சட்டத்துக்கு முரணானது. எனவே, விஜயகாந்த் 'கேப்டன்' என்ற வார்த்தையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என, உள்துறை செயலருக்கு கடிதம், அனுப்பி உள்ளேன்.
விஜயகாந்துக்கும்
அதே போல், விஜயகாந்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். என் கடிதத்திற்கு, விஜயகாந்திடமிருந்து, இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இன்னும் ஒரு மாதத்துக்குள், கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்," என்றார்.