பிப். 5ம் தேதி டெல்லி செல்கிறார் விஜயகாந்த்... பாஜக தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சு!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 5-ந் தேதி டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லை என தொடர்ந்து விஜயகாந்த் கூறிவந்தார். ஆனாலும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து விஜயகாந்த்தை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
லோக்சபா தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் தேமுதிக இடம்பெறும் என்றும் பாஜக தலைவர்கள் கூறிவந்தனர்.
தேமுதிகவுக்கு 113?
இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகியவை இடம்பெறும் என செய்திகள் வெளியாகி இருந்தன. தேமுதிகவுக்கு 113, பாமகவுக்கு 70, பாஜகவுக்கு 51 என தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.
டெல்லி பயணம்
இதனை பாமக திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 5-ந் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி செல்லும் விஜயகாந்த் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சிகள் அழைப்பு
தேமுதிக தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். இதேபோல் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ உள்ளிட்டோரும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
நிராகரித்த கேப்டன்
ஆனால் இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார் விஜயகாந்த். இந்நிலையில் பாஜக அணியிலேயே தேமுதிக நீடிப்பதை உறுதி செய்து அறிவிக்கும் வகையில் விஜயகாந்தின் டெல்லி பயணம் அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.