விஜயகாந்த் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
விஜயகாந்த் மீதான கொலை முயற்சி வழக்கினை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை: விஜயகாந்த் மீதான கொலை முயற்சி வழக்கினை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
2013-ம் ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக ஜூலை 1ஆம் தேதி ஆஜராக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே தே.மு.தி.க. வழக்கறிஞர்களுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் ஞானசேகரன், கோட்டாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விஜயகாந்த் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, நீதிமன்ற அறைக்கள் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முதன்மை நீதிபதி, உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிக்கை அனுப்பியிருப்பதாகவும், ஆனால் அதில் விஜயகாந்த் மீது எந்தப் புகாரும் குறிப்பிடப்படவில்லை எனவும் கூறினார்.
எனவே, நடைபெற்ற சம்பவம் 3 நிமிடங்கள் என்பதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதி, விஜயகாந்த் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.