உளுந்தூர்ப்பேட்டை அசிங்கம் போதாதா?.. திருப்பரங்குன்றத்தில் நிற்க மறுத்த விஜயகாந்த்!
மதுரை: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது கட்சியின் நிர்வாகிகள் வற்புறுத்தி வருகின்றனராம். ஆனால் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று நிராகரித்து விட்டாராம்.
சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளது தேமுதிக. அதிலிருந்து எப்படி தேறி வருவது என்ற யோசனையிலும், ஆலோசனைகளிலும் விஜயகாந்த் தரப்பு உள்ளது. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் இழந்த பெருமையை முதலில் மீட்பது என்ற நிலைப்பாட்டில் தற்போது தேமுதிகவினர் உள்ளனர்.
தவறான கூட்டணிதான் தாங்கள் தரிசாகிப் போனதற்கு முக்கியக் காரணம் என்பதை விஜயகாந்த் உள்ளிட்டோர் தற்போது உணர்ந்துள்ளனர். எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாட்டை மிக கவனமாக எடுக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
டெபாசிட்டைப் பறி கொடுத்து அவமானம்
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. 103 தொகுதிகளில் டெபாசிட்டைப் பறி கொடுத்தது. அதில் விஜயகாந்த்தும் ஒருவர்.
மக்கள் நலக் கூட்டணி
தங்களது இந்த நிலைமைக்கு மக்கள் நலக் கூட்டணியில் போய்ச் சேர்ந்ததுதான் முக்கியக் காரணம் என்று தோல்வி அடைந்த வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் விஜயகாந்த்திடம் கூறிப் புலம்பியுள்ளனர். அவரும் இதை ஆமோதிக்கவே செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம்
இந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்து தனது பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்ற கருத்து தேமுதிகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
நீங்களே போட்டியிடுங்க பாஸ்
மேலும் இந்த இடைத் தேர்தலில் விஜயகாந்த்தே போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதுகுறித்து விஜயகாந்த்திடமும் கட்சி நிர்வாகிகள் பேசியுள்ளனராம்.
நீ என்னப்பா சொல்ற!
இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் விஜயகாந்த் ஆலோசனை கேட்டாராம். ஆனால் அவரோ, உளுந்தூர்ப்பேட்டை அசிங்கம் போதாதா. இதெல்லாம் சரிப்பட்டு வராது. இதிலும் கெட்டது நடந்தால் சிக்கலாகி விடும் என்று கூறி விட்டாராம். இனால் விஜயகாந்த் போட்டியிடுவதிலிருந்து ஜகா வாங்கி விட்டாராம்.
பொது வேட்பாளராக அறிவித்தால்
அதேசமயம், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் விஜயகாந்த்தை பொது வேட்பாளராக அறிவித்தால் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கக் கூடும் என்ற கருத்து தேமுதிகவினர் மத்தியில் உள்ளதாம். திமுக, காங்கிரஸார் மத்தியில் விஜயகாந்த் மீது முழுமையாக கோபம் இல்லை. எனவே அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி பொது வேட்பாளராக அறிவித்து அதிமுகவுக்கு செக் வைக்கலாம் என்று தேமுதிகவினர் கருதுகிறார்களாம்.