அந்த மாடுகளைப் பூராம் டென்மார்க்குக்கே பத்தி விடுங்க.. விஜயகாந்த் ஆவேசம்
டென்மார்க் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி பசுக்களை அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: டென்மார்க்கிலிருந்து ஜெர்ஸி ரக பசு மாடுகள் சென்னைக்கு இறக்குமதியாகிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவற்றை டென்மார்க் நாட்டுக்கே அனுப்பி விட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வாட்ஸ் ஆப்பில் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதைத்தான் தற்போது விஜயகாந்த்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு கண்டித்துள்ளார்.
இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளதாகவுநம் விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெர்ஸி மாடுகள்
சென்னை விமான நிலையத்தில் டென்மார்க்கில் இருந்து ஜெர்சி வகையான மாடுகள் இறக்குமதி செய்து இருக்கின்றன என்கிற செய்தி வாட்ஸாப் மூலம் பரவலாக பரவிக்கொண்டு இருக்கிறது.
வியாதி வரும்
இந்த மாடுகள் தரும் பால் மக்கள் அருந்தினால் மிக கொடுமையான வியாதிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜல்லிக்கட்டு போராட்டம்
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள், இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இன்னும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் டென்மார்க்கில் இருந்து மாடுகள் இறக்குமதி செய்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயலாகும்.
டென்மார்க்குக்கு அனுப்பிருங்க
ஆகவே இறக்குமதி செய்த மாடுகளை இந்த அரசு கண்டறிந்து அந்த மாடுகளை டென்மார்க் நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும். நம்நாட்டில் நாட்டு மாடுகளை பராமரிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் என கூறியுள்ளார் விஜயகாந்த்.