அப்பாடா.. ஆள் கிடைச்சாச்சு.. சென்னையில் 200 வார்டுகளிலும் தேமுதிக போட்டி.. அறிவித்தார் விஜயகாந்த்!
சென்னை : தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார் முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட தொண்டர்களிடம் விருப்ப மனுக்களை பெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பாளர்கள் மூலம் பெறப்பட்ட விருப்ப மனுக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
சென்னையில் உள்ள 200 மாநகராட்சி வார்டுகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க. தொண்டர்களிடம் அதிக ஆர்வம் இல்லை என்று தெரிகிறது. கட்சி தலைவர் விஜயகாந்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட மனுக்கள் கொடுத்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் விஜயகாந்துடன் கை கோர்த்த மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் 4 பேரும் தற்போது 4 கட்சிகள் மட்டுமே சேர்ந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர். இதனால் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவது உறுதியானது.
அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்த நிலையில் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். மற்ற கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.
விஜயகாந்த் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தேமுதிக நிர்வாகிகள் சிலர் மறுத்தனர். உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுவது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக அனைத்து பொறுப்புகளுக்கும் தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
என்று கூறினர். சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியல் இன்று வெளி வரும் என்றும் மற்ற மாவட்டங்களுக்கு நாளை பட்டியல் வெளிவரும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தே.மு.தி.க.வும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இன்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன்மூலம் உள்ளாட்சித் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.