லெக் பைட்.. லெப்ட் ரைட் பேச்சு.. தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க.. மறக்க முடியாத விஜயகாந்த்!
இன்று தேமுதிக தலைவர், "கேப்டன்" விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்.
Recommended Video
சென்னை: இன்று தேமுதிக தலைவர், "கேப்டன்" விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்.
அவருக்கு வாழ்த்து சொல்வதற்கு முன்னர் அவரை பற்றி சரியாக தெரிந்து கொள்வதுதான் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இளைஞர்கள்... விஜயகாந்த்தை பற்றி எதுவுமே தெரியாமல் அவரை போல மிமிக்ரி செய்தும், இமிடேட் செய்யும் இளைஞர்கள், மற்றும் குழந்தைகள்கூட விஜயகாந்த்தின் இயல்பான குணம், தைரியமான செயல்கள், பன்முத் திறமைகளை அறிந்து கொள்வது அவசியம்கூட.
நடிக்க மறுத்த ஹீரோயின்கள்
பலத்த செல்வாக்கு மற்றும் திடமான பின்புலத்துடன் விஜயகாந்த் சினிமாவில் நுழைந்துவிடவில்லை. அவரை யாரும் தூக்கிவிடவில்லை. வளர்த்துவிடவில்லை. பக்கபலமாக இல்லை. அவ்வளவு ஏன், விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்று அவருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்களும் உண்டு. இப்படித்தான் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் களமிறங்கினார் விஜயகாந்த்.
லெக் ஃபைட் ரசிகர்கள்
ஹீரோக்கள் என்றாலே செக்க செவேல் என்று இருப்பார்கள் என்ற மாயையை அறுத்தெறிய விஜயகாந்த் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. வெற்றிக்கு தடையாக இருக்கும் தன் நிறத்துக்கு மாற்றாகவும், இணையாகவும் அவர் தேர்ந்தெடுத்தது சண்டைக் காட்சிகளைத்தான். அதையே தன் தடமாக, அடையாளமாக, அடிப்படையாக மாற்றிக் கொண்டார். இவரது லெக் ஃபைட் மிகவும் பிரபலமானது. லெக் ஃபைட்பார்க்கவே இளைஞர்களும், சிறுவர்கள் தியேட்டர்களில் முண்டியடித்து சென்றார்கள். இவருக்கு பின்னால் வந்த ஹீரோக்களுக்கு எல்லாம் பைட் என்றாலே விஜயகாந்த்தான் முன்னோடியாக நின்றார்.
காக்கி சட்டை ஹீரோ
பலவித சறுக்கல்கள், பலவித இன்னல்கள், பலவித ஏமாற்றங்களை கடந்துதான், 'விஜி' என்று செல்லமாக அழைக்கப்பட்ட விஜயகாந்த் "கேப்டன்" என்னும் அந்தஸ்தை அடைந்தார். பல திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பெரிய படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கியவர் விஜயகாந்த். காக்கிச் சட்டை உடை அணிந்து நடித்த கதாநாயகர்களில் மிகவும் அதிகமாக மக்களை கவர்ந்தவர் விஜயகாந்த்.
பரபரப்பான செயல்பாடுகள்
நடிகர் சங்க தலைவராக அவர் இருந்தபோது, அங்கு தேங்கிக் கிடந்த கடன்களை முழுமையாக அடைத்தார். 'முத்தமிழ் காவலர்' என்ற பெயரில் கருணாநிதிக்கு பவள விழா எடுத்து, தன்னுடைய பரபரப்பான செயல்பாடுகளால் தமிழக மக்களை எளிதாக கவர்ந்தார் விஜயகாந்த். நடிகர் சங்க பதவியை விட்டு வெளியே வரும்போது, கொஞ்சம் பணத்தையும் நடிகர் சங்கத்துக்காக சேர்த்துவைத்து விட்டு வந்தது விஜயகாந்த்தான்.
துணிச்சல் நிறைந்த விஜயகாந்த்
எப்படி சினிமா துறையில் வெற்றி கண்டாரோ அதேபோல்தான் அரசியல் எனும் துறையிலும் தனக்கென ஒரு வெற்றிப்பாதையை வகுத்து கொண்டார். இன்று பலர் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ள நிலையில் அரசியல் கட்சி துவங்குகின்றனர். ஆனால் கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா என்ற மாபெரும் சக்திகள் கோலோச்சிய காலத்திலேயே தன்னுடைய நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் ஈடுபட துணிந்தார்.
கரைந்து வரும் தேமுதிக
மிகக் குறைந்த காலத்திலேயே எதிர்கட்சித் தலைவராக உயர்ந்ததுடன், பெரும்பான்மை ஆதரவு பெற்ற 3-வது கட்சியாக தனது தேமுதிகவை மக்கள் முன் நிலைநிறுத்தி பெருமை பெற்றவர் விஜயகாந்த் மட்டுமே. ஆனால் தனது அரசியல் வாழ்வில் விஜயகாந்த் எடுத்த சில தவறான தொடக்கங்கள்தான் தேமுதிக எனும் சக்தி வாய்ந்த பந்து கரைய ஆரம்பித்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
இலவச மருத்துவமனை
ஆனால் அரசியலில் ஈடுபடும் முன்பே கலைத்துறையில் இருந்த வேளையிலேயே இவர் ஏழை மக்களுக்கு செய்த உதவிகள் சொல்லி மாளாது. தினமும் யாருக்காவது உதவிக் கொண்டே இருப்பவர் யார் என்றால் விஜயகாந்த்தான். அது கல்விக்கான பண உதவியாக இருக்கும், அல்லது நலத்திட்ட உதவிகளாகவும் இருக்கும். அவரது இரக்க குணத்திற்கு உச்சக்கட்ட உதாரணமாக சொல்ல வேண்டுமானால், பொதுமக்களுக்கு இலவச மருத்துவமனை அமைத்து கொடுத்ததுதான்.
சிகிச்சையில் விஜயகாந்த்
எவ்வளவோ பேர் உடல்நலிவுற்று விஜயகாந்த்தை நேரில் சந்தித்து நிதியுதவி கேட்பார்கள்.. அள்ளி கொடுத்தார். எவ்வளவோ பேர் அவர் கட்டி கொடுத்த இலவச மருத்துவமனையில் உயிர்பிழைத்து ஆரோக்கியத்துடன் நடமாடி வருகிறார்கள். இப்படி பல உயிர்களை பிழைக்க விஜயகாந்த், தற்போது உடல்நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈர மனசுக்காரர்
இப்போது விஜயகாந்த் பேசுவதையும், அவர் நடந்து வருவதையும் தமிழக மக்களால் மனதார ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தள்ளாமையில் இருக்கும் விஜயகாந்த்தை பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நெஞ்சை அடைத்துவிட்டு செல்கிறது. ஆனால் விஜயகாந்த் என்ற பெயரை கேட்டாலே தமிழக மக்களுக்கு பாச உணர்வு இன்றும் வந்துபோகிறது என்றால் அது அவருடைய நல்ல குணம், மற்றும் ஈர மனசுக்காகத்தான்.
கேப்டனுக்கு வாழ்த்துக்கள்
விரைவில் விஜயகாந்த் குணம் அடைந்து வரவேண்டும். இது போன்ற பல சமூகப் பணிகளை அவர் தொடர வேண்டும். மேலும் பல ஆண்டுகள் அவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று 'ஒன் இந்தியா' சார்பாக வாழ்த்துக்களை அள்ளி வழங்குகிறோம். HAPPY BIRTHDAY கேப்டன்!!!