ஏற்கனவே 'ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும்' தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு மேலும் மேலும் வரும் சோகம்!
சென்னை: தொகுதிகளுக்குப் போங்க, மக்களை சந்தியுங்க, குறைகளைக் கேளுங்க என்று விஜயகாந்த் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தொகுதிப் பக்கம் போகும் தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு ஏகப்பட்ட சோதனைகள் வந்து குவிகிறதாம்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது மகன் பட ஷூட்டிங்கிற்காக குடும்பத்துடன் மலேசியா போய் விட்டார். ரெஸ்ட் மற்றும் ஷூட்டிங் என்று பிசியாக இருக்கிறார். ஆனால், அங்கிருந்தபடியே தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கட்சிப் பணிகளையும் அவர் கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தங்களது கட்சிக்கு சாதகமாக்கும் நோக்கில், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு விஜயகாந்த் ரகசிய கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளாராம்.
நேரில் ஆய்வு...
அதாவது, தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவர்களது சொந்தத் தொகுதிக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைகளை நேரில் கேட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அது.
விரைந்து தீர்வு...
மேலும், உரிய அதிகாரிகளை சந்தித்து அப்பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணும் படி வலியுறுத்த வேண்டும் என்றும் தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாம்.
நன்கொடை நச்சரிப்பு...
கட்சித் தலைமையின் உத்தரவுப் படி, ஊர் ஊராக சுற்றி வருகிறார்களாம் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள். அவ்வாறு மக்களைச் சந்திக்க செல்லும் போது, தேமுதிக தலைவர்களிடம் பொதுமக்கள், அம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தப் போறோம், பிள்ளையார் கோவிலுக்கு விழா எடுக்கிறோம், பார்த்து செய்யுங்கள் என்று உண்டியல் குலுக்காத குறையாக நன்கொடை கேட்டு நச்சரிக்கிறார்களாம்.
இக்கட்டான நிலைமை...
அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்காமல் விட்டாலும் சிக்கல், கொடுப்பதற்கோ பணமும் இல்லை என்ற இக்கட்டான நிலைக்குப் போயுள்ளனராம் தேமுதிகவினர்.
குழப்பம்...
இருந்தாலும், மக்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், தட்டாமல் நன்கொடை கொடுக்கிறார்களாம் அவர்களும். ஒருவேளை நன்கொடை தராமல் விட்டு மக்களின் கோபத்திற்குப் பலியாக வேண்டாம் என அவர்கள் அஞ்சுகிறார்களாம்.
தர்மசங்கடம்...
இதனால், கூடுதல் பணம் செலவாகிறதாம். ஏற்கனவே, பண வசதி இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு கேப்டனின் இந்த உத்தரவு மேலும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளதாக தேமுதிக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிகவுக்கு மட்டும் ஏன் சாமீ இப்படியெல்லாம் சோதனையைக் கொடுக்கிறே....!