3வது முறையாக களம் காணும் விஜயகாந்த்.... இதுவரை வென்ற தொகுதிகளும், பெற்ற வாக்குகளும்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அரசியல் வாழ்க்கையில் 3வது சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கிறார். இந்த முறை அவர் உளுந்தூர்ப்பேட்டையில் போட்டியிடுகிறார்.
2006ம் ஆண்டுதான் முதல் சட்டசபைத் தேர்தலை விஜயகாந்த் சந்தித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் சந்தித்த தேர்தல் அது. 234 தொகுதிகளிலும் அவரது கட்சி தனித்துப் போட்டியிட்டது. கணிசமான வாக்குகளைப் பெற்று பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தனது முதல் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் விஜயகாந்த். அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் அவர் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டார்.
முதல் வெற்றி
விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த்துக்கு முதல் வெற்றி கிடைத்தது. இந்தத் தேர்தலில் அவருக்கும் பாமகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. இதில் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.
விஜயகாந்த் - 61,337
விஜயகாந்த்துக்கு இத்தேர்தலில் 61,337 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற பாமகவின் கோவிந்தசாமிக்கு 47,560 வாக்குகள் கிடைத்தன.
ரிஷிவந்தியத்தில் 2வது வெற்றி
2011ல் நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற விஜயகாந்த், இந்த முறை ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸ் கட்சியின் கடுமையான போட்டியையும் தாண்டி அதிமுக பலத்தால் அவர் எளிதான வெற்றியைப் பெற்றார்.
91,164
ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்துக்குக் கிடைத்த வாக்குகள் 91,164 ஆகும். எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கு 60,369 வாக்குகளே கிடைத்தன.