என்னுடன் இணையுங்கள்.. சேர்ந்து செயல்படுவோம்.. அரசியலில் குதித்த "கேப்டன்" மகன்!
இளைஞர்கள் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறு விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தொடர்ந்து அரசியலில் ஈடுபட போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் தேமுதிகவின் 14-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய விஜயபிரபகாரன், இளைஞர்கள் அனைவரும் தம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும் இவை:
கேள்வி: அரசியல் பங்கேற்பீர்களா?
ஆமாம்.. தொடர்ந்து அரசியலில் ஈடுபட போகிறேன்.
கேள்வி: இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறதே?
பொறுப்பு தேடி போவது அரசியல் இல்லை. சேவையை தேடி வருவதுதான் அரசியல். மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக நான் நிறைய திட்டங்களையும் வைத்துள்ளேன். அதை அனைத்தையும் செயல்படுத்தவும் போகிறேன். கட்சியில் பொறுப்பேற்பது குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்
கேள்வி: இதற்கு பிறகு தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவீர்களா?
கண்டிப்பாக. இது ஒருநாள் கூத்து இல்லை. என் அப்பா செய்யாததை நான் ஒன்றும் புதிதாக செய்துவிட போவதில்லை. அவர் கட்சியில் செய்ததைதான் நானும் செய்யப் போகிறேன். இதற்காக என்னுடன் இளைஞர்களும் இணைந்து அதனை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்"
இவ்வாறு அவர் பதிலளித்தார். தேமுதிகவின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு அந்த கட்சியில் நீண்ட காலம் காலியாகவே உள்ளது. அது விஜயபிரபாகரனுக்கு கொடுக்கப்பட உள்ளதாகவும் பேச்சு எழுந்து வருகிறது. இந்நிலையில் விஜய பிரபாகரனின் அரசியல் பயணம் தொடரும் என்ற அறிவிப்பு அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
முன்னதாக, விஜய்பிரபாகரை வரவேற்று சாலையின் இரு மருங்கிலும் நீண்ட தூரத்திற்கு கட் அவுட்கள், பேனர்களை தேமுதிகவினர் வைத்திருந்தனர்.