பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: மகளிர் தின வாழ்த்தில் விஜயகாந்த் குற்றச்சாட்டு
நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பெண்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தான் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மகாத்மாவின் கனவு..
பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்திட வேண்டும். நடுநிசியில் தன்னந்தனியாக பெண்கள் எப்பொழுது நடந்து செல்கிறார்களோ, அன்றுதான் நாம் பெற்ற சுதந்திரத்திற்கு பெருமை ஏற்படும் என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார்.
பெரியாரின் முயற்சி...
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பெண் கல்வி, கலப்புத் திருமணம், பெண்களுக்கு சம உரிமை போன்ற புரட்சிகரமான சிந்தனைகள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டார்.
திருமணம் எனும் வியாபாரம்...
பெண் சிசுக் கொலை என்ற நிலையில் இருந்து மாறி, பெண் குழந்தைகள் பிறப்பதையே தடுக்கும் போக்கால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பெண்ணுக்கு திருமணம் என்றாலே வரதட்சணை என்ற பெயரில் வியாபாரம் ஆக்கப்படுகிறது.
சிறப்புத் திட்டங்கள் வேண்டும்....
பெண்கள் உயர்கல்வி பயில வேண்டுமென்றால் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்கும் நிலை தமிழ்நாட்டில் இல்லை. இதையெல்லாம் மீறி மிகுந்த சிரமத்திற்கு இடையே கல்வி கற்றாலும், அதற்குரிய வேலைவாய்ப்பு இல்லை. அப்படியே வேலை வாய்ப்பு இருந்தாலும், சுற்றுப்புற சூழ்நிலைகளால் பல்வேறு கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இதைப் போக்கிட அரசு பெண்களின் வளர்ச்சிக்கென சிறப்புத் திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.
பெண்களிக்கெதிரான குற்றங்கள்....
ஒரு பெண் முதலமைச்சராக இருக்கின்ற தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. கொலை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை, ஈவ் டீசிங், செயின் பறிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
தற்காப்புக் கலை பயிற்சி....
இதை தடுக்க வேண்டிய காவல்துறையோ குற்றங்கள் நடந்த பின்னர், அது குறித்து விசாரிப்பதற்கு மட்டுமே வருகின்றனர். இந்நிலையை மாற்றிட தமிழக அரசு பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சியை அளிக்க வேண்டும்.
சாதனைகளே சாட்சி...
இது போன்று பல்வேறு இடர்ப்பாடுகளை சந்தித்து வந்தாலும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல, அதற்குரிய வசதியும், வாய்ப்பும் கிடைத்தால் சரிசமமாக பணியாற்றுவார்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார்கள். மேலும், பல்வேறு துறைகளில் அவர்கள் புரிந்து வரும் சாதனைகளே இதற்கு சான்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்...
பெண்கள் தற்சார்பு பெற்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு பெறவும், தேமுதிக சார்பில் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை இந்த இனிய நாளில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்' என இவ்வாறு விஜயகாந்த் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.