கிறிஸ்துமஸ் பண்டிகை: தேமுதிக அலுவலகத்தில் பிரியாணி கேக் கொடுத்து கொண்டாடிய விஜயகாந்த்
தேமுதிக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் பிரியாணி, கேக் வழங்கப்பட்டது. புதிய தரிசன பெதஸ்தா திருச்சபை போதகர் டி. சாமுவேல் பங்கேற்றார்.
சென்னை: இயேசுபிரான் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்படுகிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சாதி, மத, பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், எல்லா மதமும் நம் மதமே என்ற பரந்த சிந்தனையோடு, அனைத்து மதத்தினரின் விழாக்களையும் நாம் வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம் என்று விஜயகாந்த் பேசினார். இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுகிறது என்றார்.
உற்சாக கொண்டாட்டம்
இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே" என்கின்ற நமது கொள்கை முழக்கத்தின் வழியில் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக்குகளும், பிரியாணியும் வழங்கி, பல்வேறு நலஉதவிகளும் வழங்கியுள்ளேன் என்று விஜயகாந்த் கூறினார்.
ஊழல் ஒழிப்பு
தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அவர், ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து பொது மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்துப் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்களை நேசித்த இயேசு
உலகில் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பூமியில் மனிதநேயம் தழைத்திடவும், எதிரிகளிடம் அன்பு செலுத்தவும், புறம் பேசுவோரை வாழ்த்திடவும், நம்மை வெறுப்பவருக்கு உதவி செய்திடவும், அவமதிப்பவர்களை போற்றிடவும் வேண்டுமென, அன்பையும், பொறுமையையும் போதித்தவர், தன் உயிரையே மக்களுக்காக தியாகம் செய்யும் அளவுக்கு மக்களை நேசித்தவர் இயேசு கிறிஸ்து பெருமகனார் ஆவார்.
அனைத்து மதத்தினரும் கொண்டாட வேண்டும்
அவரது மார்க்கத்தை கடைபிடிப்பதுதான் கிறிஸ்துவ மதம். உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். இவ்விழாவில் தேமுதிகவைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் மட்டுமல்லாமல், எல்லா மதத்தினரும் கலந்து கொண்டு, மத நல்லிணக்கத்திற்கும், வகுப்பு ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இவ்விழா அமைந்திட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.
உதவிகள் வழங்குங்கள்
தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், தாங்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சிகளில் கிறிஸ்துவ மக்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் பெருவிழாவை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அதேபோல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தங்களால் இயன்ற அளவிற்கு இனிப்பு, கேக்குகள் மற்றும் பிரியாணி போன்றவைகளை வழங்கி, சிறப்பாக கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.