விஜயகாந்த் வந்தார்... கையெழுத்து போட்டார்... சென்றார்: மீதி பேப்பரை படிக்கணுமோ?
சென்னை: தமிழக சட்டசபைக்கு இன்று வந்த தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பி சென்று விட்டார். விஜயகாந்த் வந்து சென்ற விபரம் தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கே தெரியாது என்பதுதான் சிறப்பம்சம்.
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டம் நேற்று தொடங்கியது. பிரதான எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை
இந்த நிலையில் இன்று காலை 11.04 மணி அளவில் சட்டசபைக்கு வந்த விஜயகாந்த் அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்துட்டு விட்டு உடனடியாக காரில் ஏறி புறப்பட்டார்.
அவர் வந்த போது சட்டசபையில் கேள்வி நேரம் நடந்து கொண்டு இருந்தது. தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் அமர்ந்து இருந்தனர். விஜயகாந்த் வந்தது கூட அவர்களுக்கு தெரியவில்லை. அவர் சென்ற பிறகுதான் அந்த தகவல் அவர்களுக்கு தெரிய வந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் ஒருமாதகாலமாக தான் பேப்பர் படிக்கவேயில்லை என்று கூறினார். ஒருவேலை நேற்று படித்து விட்டு வைத்த மீதி பேப்பரை இன்று படிக்க அவசரமாக போனாரோ என்னவோ?.
நேற்று முதல் நாள் கூட்டத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சென்று விட்டார்.
"சட்டப்பேரவையில் தனக்கு இருக்கை ஒதுக்கவில்லை. இதனால் தனது சட்டமன்ற கடமையை ஆற்ற முடியவில்லை" என்று வருத்தத்கூறிவிட்டு சென்று விட்டார். ஆனால் விஜயகாந்த் என்ன வசதியை எதிர்பார்த்தாரோ தெரியவில்லை.
முதல்வர் இருக்கையும் காலி, எதிர்கட்சித்தலைவர் இருக்கையும் காலி, 5முறை முதல்வராக இருந்தவரும் 12முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற பழுத்த அரசியல்வாதியுமான கருணாநிதிக்கு இருக்கையேயில்லை என்பதுதான் தமிழக சட்டசபையின் முக்கிய அம்சமாக உள்ளது.