அட, வழக்கமான புலம்பல்ங்க இது.. அதிமுகவை வாரும் விஜயகாந்த்
தினகரனின் வெற்றிக்கு திமுக தான் காரணம் என்று அதிமுக கூறுவது தோற்றவர்களின் வழக்கமான புலம்பல் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டதாக கூறப்படும் கருத்தில் உடன்பாடில்லை என்று தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொதுத்தேர்தல் தான் அதை முடிவு செய்யும் என்றார்.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் குறித்து பல கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் தினகரனின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் தேமுதிக சார்பாக இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மனைவி பிரேமலதாவுடன் கலந்துக்கொண்ட விஜயகாந்த் தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகளை வழங்கியபின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறுகையில,் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரின் வெற்றிடத்தை தினகரன் நிரப்பி விட்டார் என்பதை ஏற்க முடியாது. இதற்கான பதிலை பொதுத்தேர்தல் தான் முடிவு செய்யும். தினகரன் குறித்து என்னிடம் கேட்பதற்கு பதில் வாக்களித்த மக்களிடம் கேளுங்கள் நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது என்றார் விஜயகாந்த்.
தினகரனின் வெற்றி திமுகவால் நிகழ்ந்தது என்ற அதிமுகவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த அவர், இது தோற்றவர்களின் வழக்கமான புலம்பல் தான் என்றார்.