லைவ் ஒளிபரப்பில் மீடியாக்களை வறுத்தெடுத்த விஜயகாந்த்.. சங்கடத்தில் நெளிந்த டிவி சேனல்கள்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வேடலில் தேமுதிக நடத்திய திருப்புமுனை மாநாட்டை நேரடி ஒளிபரப்பு செய்த டிவி சேனல்களை பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டது விஜயகாந்த் பேச்சு.
நேரடி ஒளிபரப்பை அவ்வப்போது நிறுத்தி, டேமேஜை குறைத்த பிறகு மீண்டும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டியதாயிற்று டிவி சேனல்களுக்கு.
குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்துள்ள விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி, தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை எந்த கட்சி கூட்டணியில் சேருவது என்பதை அறிவிக்காமல் உள்ளது.
அனைத்துக்கட்சிகளுமே
விஜயகாந்த்தின் மதில்மேல் பூனை போன்ற நடவடிக்கையால், அதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகளுமே அவரை தங்கள் கட்சி கூட்டணியில் இணைத்துக்கொள்ள படாதபாடுபட்டு வருகின்றன.
திருப்புமுனை மாநாடு
இந்நிலையில்தான், தேமுதிக சார்பில், கடந்த சனிக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டம் வேடலில், திருப்புமுனை மாநாடு, என்ற பெயரில், கட்சி மாநாடு நடத்தினார் விஜயகாந்த்.
வாழ்த்திய கட்சிகள்
இந்த மாநாட்டில், கூட்டணி குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, விஜயகாந்த் அறிவிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருந்தது. பல கட்சிகளும், விஜயகாந்த் மாநாடு 'வெற்றி பெற' வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அளவுக்கு தமிழக அரசியல் களம் திடீரென மாறியது.
டிவிகளில் லைவ்
மக்களின் எதிர்பார்ப்பு, கட்சிகளின் எதிர்பார்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி ஊடகங்களில் பெரும்பாலானவை விஜயகாந்த்தின் மாநாட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.
பெரும்பாலான ஊடகங்கள்
கேப்டன் டிவி, கேப்டன் செய்திகள் தவிர்த்து, புதிய தலைமுறை, தந்தி டிவி, சன் நியூஸ், பாலிமர் நியூஸ் போன்றவையும் விஜயகாந்த் மாநாட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்தன. இதில்தான் சிக்கலை ஏற்படுத்தினார் விஜயகாந்த்.
அரசைவிட அதிகமாக வறுபட்ட ஊடகம்
விஜயகாந்த் தனது உரையின்போது, ஜெயலலிதா அரசை தாக்கி பேசியதற்கு ஈடாக, இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக ஊடகங்களைத்தான் தாக்கி பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சு ஒன்றுக்கொன்று தொடர்பற்று, வழவழ என்று இருந்தாலும்கூட, ஊடகங்களின் பெயரை சொல்லி, நிகழ்ச்சிகளின் பெயரை சொல்லி விமர்சனம் செய்ததை பலராலும் புரிந்துகொள்ள முடிந்தது.
சொல்லி, சொல்லி திட்டு
புதியதலைமுறை சேனலையும், தந்தி டிவியையும் பெயரை சொல்லியே விமர்சனம் செய்தார் விஜயகாந்த். குறிப்பாக கிச்சன் கேபினட் எனப்படும் புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியின் பெயரையும் சொல்லியே விமர்சனம் செய்தார் விஜயகாந்த்.
படாதபாடு பட்ட ஊடகங்கள்
அனைத்து ஊடகங்களுமே ஆளும், அதிமுகவுக்கு ஆதரவாக செய்திகளை ஒளிபரப்புவதாக விஜயகாந்த் குற்றம்சாட்டினார். இப்படி தந்தி டிவி குறித்து விஜயகாந்த் பேசியபோது, நேரடி ஒளிபரப்பை அந்த சேனல் நிறுத்த வேண்டியதாயிற்று. பிரேமலதா பேசும்போது, ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சனம் செய்தார் அப்போதும் தந்தி டிவி நேரலையை நிறுத்தியது. பாலிமரும் அப்போது நேரலையை நிறுத்தியது.
என்னதான் சொல்ல வந்தார்
சர்ச்சைக்குரிய பேச்சு வரும்போதும் திமுகவை தாக்கியபோதும் சன் நியூசும், நேரலையை நிறுத்த வேண்டியதாயிற்று. புதியதலைமுறை மற்றும் தந்தி டிவிகளில் விஜயகாந்த்தின் மாநாடு நடைபெற்றபோது, அதுகுறித்து விவாதிக்க அரங்கில் முக்கிய பிரமுகர்களும் இருந்தனர். விஜயகாந்த்தின் பேச்சுக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை அவர்கள் எடுத்துக்கூறினர்.
லைவ் கவரேஜ் கொடுத்தும் திட்டுதானா
இப்படி, விஜயகாந்த் நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்பியும், அதுகுறித்து விவாதித்தும் முக்கியத்துவம் கொடுத்த டிவி சேனல்கள் பற்றி விஜயகாந்த் ஏன் இவ்வாறு பேசினார் என்பது யாருக்குமே புரியாத புதிர்தான். அதேநேரம், கூட்டணி குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் கிங்காக இருக்க வேண்டும் என்று கோஷமிட்டதை, ஊடகங்கள் நன்கு கவர் செய்யுமாறு கோரிக்கை விடுக்க மட்டும் தவறவில்லை விஜயகாந்த்.
உடனடி மறுப்பு
புதியதலைமுறையில் விஜயகாந்த் பேசியபோது, நேர்பட பேசு நிகழ்ச்சி நடந்தது. நெறியாளர் கார்த்திகைசெல்வன், விஜயகாந்த்தின் குற்றச்சாட்டை உடனடியாக மறுத்தார். அனைத்து கட்சிகளுக்குமே, புதியதலைமுறை சம உரிமை அளித்து செய்தி வெளியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விஜயகாந்த்துக்கு உரிமையுள்ளதா
நேர்படபேசு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரும், விஜயகாந்த் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். மற்ற கட்சிகள் ஆபீசிலாவது, மீடியாக்காரர்களுக்கு தனி அறை தந்துள்ளனர்.. விஜயகாந்த் கட்சி ஆபீசில் அதுவும் கிடையாது என்பதோடு, பத்திரிகையாளர்கள் அங்கு மிருகத்தைவிட கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்று கூறிய அவர், அப்படி பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கும் விஜயகாந்த் கவரேஜ் மட்டும் கேட்பது எப்படி என கேள்வி எழுப்பினார்.
ஊடக அறம்
இதுகுறித்து தொலைக்காட்சி ஊடக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: அரசியல்வாதிகள் பேசுவதையெல்லாம் அப்படியே ஒளிபரப்ப வேண்டும் என்பது ஊடக அறத்திற்கு மாறானது. ஒருவரை பற்றி தரக்குறைவாக பேசும்போது அதை சென்சார் செய்துவிட்டு செய்தி ஒளிபரப்புவதுதான் நியாயம். அச்சு ஊடகங்களிலும் இப்படித்தான் காலம் காலமாக செய்யப்பட்டுவருகிறது என்று தெரிவித்தனர்.