நீங்க கூட சமூக விரோதி... மீண்டும் பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தம்முடைய பார்வையில் பத்திரிகையாளர்களும் சமூக விரோதி என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: என்னுடையய பார்வையில் நீங்க கூட சமூகவிரோதிதான் என பத்திரிகையாளர்களை மீண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்டகாலம் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தவிர்த்து வந்தார். தமிழகமே கொந்தளித்து போராடிய போதுகூட அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு அமைதியாக இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உங்களுடன் நான் என தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறார் விஜயகாந்த். இந்த நிலையில் சென்னை திரும்பிய விஜயகாந்த், போலீசார் வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தை நேற்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
உங்களுக்கே தெரியலையே...
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ஜெயக்குமார் வந்து என்ன நிவாரணம் சொல்லியிருக்கிறார் சொல்லுங்க பார்ப்போம்? அவருதானே மீன் வளத்துறை அமைச்சராக இருக்கிறார் இல்ல.. அவரு என்ன சொன்னாருன்னு நீங்க சொன்னாதான் நானும் சொல்ல முடியும். அரசாங்க என்ன சொல்லுச்சு சொல்லுங்க.. அதைக் கேட்டா உங்களுக்கே தெரியலையே என்றார்.
கைது தப்பு
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், யார் திருடன்? யார் குற்றவாளின்னு போலீசாருக்கு தெரியாதா? சும்மா பொத்தாம் பொதுவா எல்லாரையுமே நீங்க கைது பண்ண கூடாது... நான் என்ன சொல்றேன்..... யாரு சமூக விரோத கும்பல்னு போலீஸ்காரங்களுக்கு தெரியாமலா இருக்கும்? என்றார்.
போக போக தெரியும்
மேலும் போலீசார் தடியடி தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன..உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, என்னுடைய நிலைப்பாடு போகப் போகத்தான் தெரியும் என்றார் விஜயகாந்த்.
நீங்க கூட சமூகவிரோதிதான்
அத்துடன் 'உங்கள் பார்வையில் யார் சமூகவிரோதி' என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சார் என் பார்வைன்னு எதுக்காக கேட்கிறீங்க.. என் பார்வையில நீங்க கூட சமூகவிரோதி அப்படிப் பார்த்தா.. போலீஸ்காரங்க கண்டுபிடிச்சு சொல்லனும்.. என் பார்வை..என் பார்வைன்னா போலீஸ்காரங்க கண்டுபிடிச்சு சொல்லனும் என்றார் விஜயகாந்த்.