பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தொண்டரை திடீரென சரமாரியாகத் தாக்கிய விஜயகாந்த்- பரபரப்பு
சென்னை: தம்முடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கட்சித் தொண்டரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சரமாரியாகத் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மவுனமாக இருந்து வந்தார் விஜயகாந்த். இன்று அவரது பிறந்த நாளையொட்டி மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஒருசேர சென்று விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் கேக் வெட்டி மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ந்து நெகிழ்ந்தனர். இந்த நிலையில் தமக்கு பிறந்த நாளையொட்டி பரிசு கொடுத்த தொண்டர் ஒருவரை விஜயகாந்த் சரமாரியாக தாக்கியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் தொண்டர் ஒருவர் நினைவுப் பரிசை வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்... போஸ் கொடுத்த கையோடு விஜயகாந்தை திரும்பிப் பார்க்க.. விஜயகாந்தோ அவரை சரமாரியாகத் தாக்க... அந்த தொண்டர் அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.
தொண்டரை விஜயகாந்த் திடீரென ஏன் அடித்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதற்கு முன்னர் வேட்பாளரை அடித்தது, கட்சி எம்.எல்.ஏ.வை அடித்தது, பத்திரிகையாளரைத் தாக்கியது, காறி உமிழ்ந்தது என பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.