தமிழக அரசின் ஓட்டை பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்: விஜயகாந்த்
சென்னை: தமிழக அரசுப் பேருந்துகள் குறித்து நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையென தற்போது நிரூபணமாகியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில், ''தமிழக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்திற்குள்ளாவதும், நடுவழியில் பழுதாகி நிற்பதும், பேருந்தின் சக்கரம் கழண்டு ஓடுவதும், மேற்கூரை பெயர்ந்து விழுவதுமென மோசமான நிலையில் உள்ளதென்றும், போக்குவரத்து துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வற்புறுத்தலால், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பேருந்துகளை உரிய முறையில் ஆய்வு செய்யாமல், அதில் உள்ள தவறுகளையும், பழுதுகளையும் சுட்டிக்காட்டாமல், சிலநேரங்களில் பேருந்தை பார்க்காமலேயே பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏற்றதென தகுதிச்சான்று வழங்குவதும் போன்ற நிலை உள்ளதாக கடந்த 12.08.2015 அன்று "தமிழக அரசு பேருந்துகளின் நிலை" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையென தற்போது நிரூபணமாகியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பேருந்தில் பயணம் செய்த சுவாதி என்ற பெண்மணி, பேருந்தின் அடித்தளம் உடைந்து, அதனால் ஏற்பட்ட ஓட்டை வழியாக பேருந்திலிருந்து கீழே விழுந்துள்ளார். அவர் பேருந்து சக்கரத்தின் பின்பகுதியில் விழுந்ததாலும், அந்த பேருந்தின் பின்னால் வேறு எந்த வாகனமும் வராததாலும் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
அவருக்கு இது மறுபிறவி என்றே சொல்லமுடியும். இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள், ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளிவந்ததாலும், கேரளா காவல்துறை வழக்குபதிவு செய்ததாலும், இனியும் இதை தமிழக மக்களிடம் மறைக்க முடியாது என்ற காரணத்தினால் ஒருசில அதிகாரிகள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுவாகவே இதுபோன்ற நிலையில்தான் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்கிவருகின்றன.
ஒரு பேருந்தினுடைய ஆயுட்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோமீட்டர் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதுபோன்று விதிகளைமீறி அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் மோசமான நிலையில் இயங்குவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை முடிச்சூரில் இதேபோன்று தனியார் பள்ளிப்பேருந்தின் ஓட்டையில், அப்பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி கீழேவிழுந்து அந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சரும், அதிமுக அரசும் பல்வேறு வியாக்கியானங்களை கூறி, பேருந்துகளை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் வாய்கிழிய பேசினர்.
ஆனால் தற்போது அரசு பேருந்தினால் ஏற்பட்டுள்ள இந்த விபத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலிலதா பெறுப்பேற்றுக்கொள்வாரா? அந்த பெண்மணியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? வழக்கம்போல் நிதியை கொடுத்து, நீதியை மூடி மறைத்திருப்பார்கள். மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய அதிமுக அரசு, நிர்வாக திறமையின்மையாலும், கேட்க வேண்டியதை கேட்காமல், வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு, வாய்மூடி மௌனமாக இருப்பதுதான் இதுபோன்ற நிலைக்கு காரணமாகும்.
மேலும் தமிழக அரசு பேருந்துகள் தினந்தோறும் விபத்திற்குள்ளாவதும், அதனால் அதில் பயணம் செய்பவர்களும், சாலைகளில் பிற வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் விபத்திற்குள்ளாகி படுகாயமடைவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் தமிழகத்தின் ஏழை, எளிய பயணிகளிடம் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்தில் பயணம் செய்தால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது "மனுசன மனுசன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி, இது மாறுவதெப்போ, வாழுவதெப்போ ஏழைத்தம்பி" என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
எனவே அதிமுக அரசு பேருந்துகளுக்கு தனிக்குழுக்களை அமைத்து, கண்காணித்து, அக்குழுவின் பரிந்துரைக்குப் பிறகே வட்டார போக்குவரத்து அலுவலர் பேருந்திற்கு தகுதிச்சான்று வழங்கவேண்டுமென்ற நடைமுறையை கொண்டுவந்தால், பெரும்பாலான பேருந்து விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கமுடியும். எனவே அதிமுக அரசு பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், பேருந்துகளுக்கு அவசிய அடிப்படை தேவையான, பராமரிப்புப்பணிகளில் மெத்தனம் காட்டாமல், அதற்கு முக்கியத்துவம் அளித்து, பேருந்துகளை உடனுக்குடன் சரியான முறையில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.