பிரதிபலனை எதிர்பார்க்காமல் நிவாரண உதவிகள் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி: விஜயகாந்த்
சென்னை: சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சென்னையைப் புரட்டிப் போட்ட மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.
அந்தவகையில் ஆளும் அதிமுக அரசு எதுவும் செய்யாத நிலையில், பிரதிபலனை எதிர்பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற அளவு உதவிகளைச் செய்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேள்விக்குறி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான மழை, வெள்ள பாதிப்பிற்கு, இந்த ஆளும் அதிமுக அரசாங்கம் எதுவும் செய்யாத, செயல்படாத நிலையில், இளைஞர்களும், தன்னார்வ நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும், பெரும் தொழிலதிபர்களும், இஸ்லாமிய, கிறிஸ்துவ சகோதரர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சார்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் பெரும் பங்கெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்ககளை தங்களால் இயன்ற அளவு குடிநீர், உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், மனித நேயத்தோடு, உதவிடும் மனதோடு அவர்கள் ஆற்றிய தொண்டு ஈடுஇணையற்றது. எப்போதெல்லாம் அரசாங்கம் முற்றிலும் செயல்படாமல் செயலிழக்கிறதோ, அப்போது மக்கள் தாங்களாகவே வீதிக்கு வந்து, தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் நிலைமை தமிழகத்தில் உருவாகியுள்ளது. இது ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
நாடகம்
சென்னை மாநகரத்தில், மாநகராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பின் ஆட்சி நடைபெறுகிறதா? மாநகராட்சி மேயர், கவுன்சிலர் என்கின்ற ஆளும் கட்சி அதிகாரம் படைத்தவர்கள் இருக்கிறார்களா? என்கின்ற மிகப்பெரிய ஐயம் அனைத்து மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிமுகவை பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறச் செய்ததன் விளைவுதான் இதற்கு காரணம். அதனால்தான் அதிமுக கவுன்சிலர்களும், வட்ட செயலாளர்களும், உதவி செய்பவர்களை மிரட்டி, தாங்கள் செய்ததுபோல் ஜெயலலிதாவின் படத்தையும், கட்சி சின்னத்தையும் வைத்து அதிமுகவினர் செய்ததுபோன்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வெட்கக்கேடானது
இது தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. இதன்மீது இதுவரையிலும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வெட்கக்கேடானது. எனவே இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும், இனிவரும் காலங்களில் உறுதியோடு, மாற்றத்தை உருவாக்கி, ஊழல் இல்லாத நல்ல ஒரு ஆட்சியை நமது தமிழகத்திற்கு வழங்கவேண்டும்.
நன்றி
இந்த மழை, வெள்ள நிவாரணப்பணியில் தங்களை தாங்களாகவே ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இளைஞர்களுக்கும் தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் தேமுதிக சார் பில் இயன்ற உதவிகளை செய்து, என்றும் தேமுதிக மக்களுடைய தோழன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மக்கள் சேவையில் பெரும் பங்காற்றிய அனைத்து தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.