தொண்டனா மட்டும் இருக்கிறோம்.. கட்சி பொறுப்பே வேண்டாம்... நிர்வாகிகளால் விஜயகாந்த் 'அப்செட்'
சென்னை: தேமுதிகவின் கடைக்கோடி தொண்டனாக மட்டுமே இருந்துவிடுகிறோம்.. எங்களை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்து விடுங்கள் என அக்கட்சி நிர்வாகிகள் பலரும் கடிதங்களை அனுப்பி வருவதால் அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாராம் விஜயகாந்த்.
சட்டசபை தேர்தல் படுதோல்வியுடன் தேமுதிகவுக்கு அக்கட்சி நிர்வாகிகளே முடிவுரை எழுதத் தொடங்கிவிட்டனர்... தே.மு.தி.க.வில் இருந்து பல மாவட்ட செயலாளர்கள் விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் கட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருந்தவர்களும் கூட அடுத்தடுதது விலகினர். விஜயகாந்துக்கு அறிக்கை எழுதிக் கொடுத்த பேராசிரியர் ரவீந்தரனும் கூட வெளியேறினார்.
மா.செ.க்கள் விடுவிப்பு
இந்த நிலையில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி ஒருசில நிர்வாகிகளையும் விஜயகாந்த் நீக்கினார். ஒரு சில மாவட்ட செயலாளர்கள் உடல்நலம் கருதி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தங்களை விடுவிக்க கோரியதால் அதனை ஏற்றும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
குவியும் கடிதங்கள்....
அண்மையில் நெல்லை மாவட்ட செயலாளர் அய்யப்பெருமாள் உடல்நலம் கருதியும், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் மணிகண்டன் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களை தொடர்ந்து மேலும் சில மாவட்ட செயலாளர்கள் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கக்கோரி விஜயகாந்துக்குக் கடிதம் கொடுத்துள்ளனர்.
தொண்டராக மட்டும்...
அந்த கடிதங்களில், தங்களின் ரசிகர்களாக 25 ஆண்டுகளாக இருந்து பின்னர் கட்சியில் சேர்ந்து தங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். குடும்ப சூழ்நிலை காரணமாக நாங்கள் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்க கேட்கிறோம். பொறுப்பில் இருந்து விடுவித்தாலும் கட்சியில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
விழிபிதுங்கும் விஜயகாந்த்
கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரி இப்படி ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில இருப்பவர்களும் கடிதங்களை தொடர்ந்து அனுப்புகின்றனர். இதனால் இவர்களையெல்லாம் எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் விஜயகாந்த் விழிபிதுங்கியிருக்கிறாராம்.