ரேசனில் அரிசி, கோதுமை சரியாக கிடைப்பதில்லை.. விஜயகாந்த் குற்றச்சாட்டு !
தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்களை தடையில்லாமல் அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் அரிசி, மன்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற பொருட்கள் சமீப காலமாக சரிவர கிடைப்பதில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் இருக்கின்ற பல இலட்சக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் இன்றைக்கு நம்பி இருப்பது ரேசன் கடைகளின் கிடைக்கும் பொருட்களைத்தான். ஆனால் ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் அரிசி, மன்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற பொருட்கள் சமீப காலமாக சரிவர கிடைப்பதில்லை.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் பல விதமான இன்னல்களை சந்தித்துகொண்டு இருக்கும் வேளையில், ஒருபுறம் தண்ணீர் பிரச்சனை, ரேசன் பொருட்கள் கிடைப்பதில்லை, வேலை இல்லா திண்டாட்டம், வறுமை, வறட்சி, விவசாயிகள் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தமிழக மக்கள் சிக்கித்தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களித்ததன் விளைவு, இன்றைக்கு சிந்திக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஊழல் இல்லாத நல்ல தலைமை தமிழகத்திற்கு தேர்வு செய்யவேண்டும் என்று அனைவரும் சிந்திக்க ஆரமித்துவிட்டார்கள். ஏற்கனவே ஜெயலலிதாவின் நிலையான ஆட்சி இருக்கும் பொழுதே, ரேசன் பொருட்கள் சரிவர மக்களிடையே கிடைக்கவில்லை, இப்பொழுது நிலையில்லாத ஆட்சி நடைபெறும் பொழுது எப்படி ரேசன் பொருட்கள் சரியாக கிடைக்கும் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த நிலையில்லாத ஆட்சி உடனடியாக ரேசன் பொருட்களை சரியான முறையில் மக்களுக்கு சென்றடைய செய்து, தட்டுப்பாடில்லாத நிலமையை உருவாக்க வேண்டும். உடனடியாக நிலையில்லாத ஆட்சியான அதிமுக மக்களின் நிலையை புரிந்துகொண்டு உடனடியாக தமிழகம் முழுவதும், ரேசன் பொருட்களை தடையில்லாமல் அனைவருக்கும் கிடைத்திட செய்ய வேண்டும்.
இந்த நிலைமை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று எண்ணித்தான் வீடுதேடி ரேசன் பொருட்கள் வரும் என்கிற ஒரு நல்ல திட்டத்தை தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிவித்திருந்தது. ஆளுபவர்கள் இங்கு மாறிக்கொண்டு இருந்தாலும், தமிழக மக்களின் நிலை இங்கு மாறவில்லை. இந்த நிலை மாறி மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் ஒரே குறிக்கோள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.