போலி மருத்துவர்களை கடுமையான சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் - விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் போலியாக உள்ள மருத்துவர்களை ஒழிக்கவும் அவர்களை கடுமையாக தண்டிக்கவும் புதிய சட்டம் தேவை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் பல இடங்களில் போலி மருத்துவர்கள் கருக்கலைப்பு சம்பவம் மற்றும் ஸ்கேன் நிலையங்களில் செயல்படுவதை அனைவரும் அறிவர். போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்த கும்பலுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. தண்டனை முடிந்து சிறையில் இருந்து விடுதலையானவுடன், அதே நபர்கள் போலிச் சான்றிதழ்கள் தயாரித்ததற்காக காவல்துறை கைது செய்து இருப்பது, குற்றம் செய்தவர்கள் கைது ஆவது, சிறைக்கு செல்வது, விடுதலை ஆவது என்பது தொடர்கதையாகவே இருக்கிறது.
இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் கண்காணிக்க வேண்டும். போலி மருத்துவர்களை கண்டுபிடித்து நடைமுறை சட்டப்படி நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்க சாட்சிகள் ஒத்துழைக்காததால், போலி மருத்துவர்களை தண்டிக்க முடியாதநிலை உள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக 2014 ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் நாளில் இந்திய மருத்துவ தலைவர் பத்திரிகையில் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மருத்துவத்துறை அதிகாரிகள் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து ஒழிக்க ஆணை பிறப்பித்துள்ளது.
போலி மருத்துவர்களிடம் மருத்துவம் பார்த்து இறந்த நோயாளிகள் குறித்த செய்திகளும், பத்திரிகைகளில் வந்துள்ளது. கருக்கலைப்பு செய்யும் அளவில் போலி மருத்துவர்களின் தொழில் வளர்ச்சியை நடைமுறை சட்டங்களால் தடுக்க முடியாத நிலையாக இருப்பின், புதிய சட்டம் இயற்றலாமே என்கிற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுகிறது.
இனிமேலாவது சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, கடுமையான சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.