வைகோ வீட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சங்கரன்கோயில்: நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்று சந்தித்து பேசினார்.
லோக்சபா தேர்தல் இரண்டாவது கட்ட பிரசாரத்தை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, நெல்லையில் துவக்கினார். இம்முறை, அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்யும் வகையில், பயணத்திட்டம் இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சங்கரன்கோவிலில், தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரும்படி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அழைப்பு விடுத்தார். அதை, விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார்.
அதன்படி, தென்காசி ம.தி.மு.க., வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து, சங்கரன்கோவிலில், இன்று மாலை, விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். அதில், வைகோவும் பங்கேற்கிறார்.
கலிங்கப்பட்டியில் விஜயகாந்த்
பிரசாரத்திற்குப் முன்னதாக மாலை 4 மணிக்கு வைகோவின் சொந்த ஊரான, அருகில், கலிங்கப்பட்டியில் உள்ள, அவரது வீட்டிற்கு விஜயகாந்த் சென்றார்.
தாயாரிடம் ஆசி பெற்ற விஜயகாந்த்
வைகோவின் தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திய விஜயகாந்த் அவரிடம் ஆசி பெற்றார்.
வரவேற்ற வைகோ
இதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு வந்த விஜயகாந்தை ஆளுயர மாலை அணிவித்து வைகோ வரவேற்றார்.
இணைந்த கைகள்
கூட்டணியில் இணைந்து விட்டோம்... இணைந்து பிரசாரம் செய்யப் போகிறோம் என்பதை உணர்த்தும் வகையில் வைகோவும், விஜயகாந்தும் இணைந்து செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்தனர்.
விருதுநகரில் பிரசாரம்
இதைத் தொடர்ந்து சங்கரன்கோவிவில் பிரசாரம் செய்யும் விஜயகாந்த்தும் வைகோவும், விருதுநகர் செல்கின்றனர். அங்கும் இருவரும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பா.ஜ.க கூட்டணியில் உள்ள இரு கட்சி தலைவர்கள், முதல் முறையாக இணைந்து பிரசாரம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி- ஜெயலலிதா
தி.மு.க., கூட்டணியில் வைகோ இருந்தபோது, சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, முதல்வர் ஜெயல்லிதா, ஆகியோர், கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டிற்குச் சென்று அவரது தாயாரிடம் ஆசி பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.