வீரப்பன் ஜாதகம் பார்த்து வேட்டையாடிய விஜயகுமார் ஐபிஎஸ்.... சில சுவாரஸ்ய தகவல்
சந்தனக்கடத்தல் வீரப்பன் வேட்டை நடந்தது எப்படி என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் உள்ள விஜயகுமார் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: சந்தனக்கடத்தல் வீரப்பன் 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வேட்டைக்கு தலைமையேற்ற முன்னாள் காவல்துறை தலைவர் விஜயகுமார், 'வீரப்பன் சேசிங் தி பிரிகண்ட்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் வீரப்பனின் ஜாதகத்தினை இணைத்துள்ளார். வீரப்பன் வேட்டைக்கும் ஜாதகத்திற்கு உள்ள தொடர்பு குறித்து புத்தக வெளியிட்டு விழாவில் சுவாரஸ்ய தகவலை கூறினார்.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வால்டர் தேவாரம் உள்ளிட்ட முக்கிய காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். புத்தகம் பற்றி சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமார் சில கேள்விகளை விஜயகுமாரிடம் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில்கள் சுவாரஸ்யமாகவும், சற்றே அதிர்ச்சியாகவும் இருந்தது.
மகனை கொன்ற வீரப்பன்
வீரப்பனை பிடிக்க சஞ்சய் அரோரா தலைமையிலான குழுவினர் வீரப்பனை நெருங்கிய போது குழந்தையின் அழுகுரல் தங்களை காட்டிக்கொடுத்து விடும் என்று அஞ்சி அந்த குழந்தையை கொல்ல உத்தரவிட்டார். அது வேறு யாருடைய குழந்தையுமல்ல வீரப்பனின் சொந்த குழந்தைதான் என்றார் விஜயகுமார்.
வீரப்பன் ஜாதகம்
விஜயகுமார் தனது புத்தகத்தில் வீரப்பன் ஜாதகத்தை இணைத்தது ஏன் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் சுவாரஸ்யமாகவே இருந்தது. வீரப்பன் பிறந்த ஊர் கோபி நத்தம். தேதி ஜனவரி 18, 1957 தந்தை பெயர் முனியசாமி, தாய் பொண்ணுத்தாயம்மாள். இந்த ஜாதகம் வீரப்பன் ஜாதகம் என்பது தெரியவந்தது. இதை வைத்து அவர் எந்தெந்த காலகட்டத்தில் பலவீனமாக இருப்பார் என்பதை தெரிந்து கொண்டதாக கூறினார்.
ராஜதண்டனை
ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காண்பித்த போது அவர் நீண்ட காலம் வனவாசத்தில் இருப்பார் என்றும் அவருக்கு ராஜதண்டனை கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. 14, 19, 32,44, 55 ஆகிய காலகட்டங்களில் பலவீனமாக இருப்பார்கள் என்றும் கூறினார்கள்.
வேட்டைக்கு நல்ல நாள்
வீரப்பனை வேட்டையாட அக்டோபர் 18தான் நல்ல நாள் என்றும் கூறினார்கள். வீரப்பனை பிடிக்க நாங்கள் எந்த நல்ல தகவலையும் தவற விட தயாராக இல்லை என்றும் கூறினார் விஜயகுமார். அதேபோல 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ல் வீரப்பன் கொல்லப்பட்டார்.
ஆபரேசன் பட்டாம்பூச்சி கூடு
வீரப்பனை பிடிக்க போலீஸ் வைத்திருந்த பெயர் 'ஆபரேசன் பட்டாம்பூச்சி கூடு' வெற்றியடைந்த போது வீரப்பன் மீசை மழிக்கப்பட்டு எடை குறைந்திருந்தது. சடலமாகத்தான் வீரப்பனை பார்த்தேன் என்றும் விஜயகுமார் கூறினார். வித்தியாசமான உணர்வாக இருந்தது என்று தனது கடந்த கால நினைவுகளை புத்தக வெளியீட்டு விழாவில் அசைபோட்டார் விஜயகுமார்.