காஞ்சி சங்கர மட நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்... விஜயேந்திரருக்கு எதிராக சலசலப்பு
காஞ்சி சங்கர மட நிர்வாகத்தை கையிலெடுக்கும் விஜயேந்திரருக்கு எதிராக சலசலப்புகள் எழுந்துள்ளன.
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மட நிர்வாகத்தில் அதிரடியாக மாற்றங்களை செய்ய புதிய மடாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் விஜயேந்திரர் திட்டமிட்டு வருவதற்கு எதிராக இப்போதே சலசலப்புகள் எழத் தொடங்கிவிட்டதாம்.
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக 1954-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் ஜெயேந்திரர். மடத்தின் பொறுப்பை ஏற்ற காலகட்டத்திலேயே தண்டத்தைத் துறந்துவிட்டு வெளியேறியவர். அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தபோது, தண்டத்தைத் துறந்தது குறித்து கேட்கப்பட்டது. ' என் உடலுக்குள் தண்டத்தின் சக்தியை ஏற்றிக் கொண்டேன்' எனப் பதில் அளித்தார்.
மகா பெரியவர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திரர் மறைவுக்குப் பிறகு, 1994-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டு, மடத்தினை வழிநடத்தி வந்தார் ஜெயேந்திரர். அரசியலோடு ஆன்மிகத்தையும் கலந்து செயல்பட்டவிதம் சர்ச்சையைக் கிளப்பினாலும், தன்னுடைய பணிகளில் உறுதியாக இருந்தார்.
காஞ்சி மடத்தில் பஞ்சாயத்து
அவர் மரணம் அடைந்த உடனேயே மடத்துக்குள் நிர்வாகச் சிக்கல்கள் எழுந்துள்ளன என்கின்றனர் மடத்தின் பக்தர்கள். காஞ்சி மடத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஜெயேந்திரர் ஆதரவாளர் ஒருவர் நம்மிடம் பேசினார். " பெரியவருக்கும் இளையவருக்கும் இடையில் அவ்வப்போது சில மோதல்கள் எழுவது வாடிக்கையாகவே இருந்து வந்தது. மடத்தின் நிர்வாகத்துக்குள் வரவு செலவு கணக்குகளிலும் தொடர்ந்து பிணக்குகள் இருந்து வந்தன.
உடல்நலம் பாதிப்பு
'மடத்தின் நிர்வாகப் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று அவர் தொடர்ந்து போராடி வந்தார். 2016ம் ஆண்டு ஜூலை மாதம் ஆந்திராவில் உள்ள சங்கர மடத்துக்கு சதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பதற்குச் சென்றார் பெரியவர். தொடர்ச்சியாக விரதத்தால், பெரியவரின் உடலில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்த மடத்தின் உதவியாளர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள ஆந்திர மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஐ.சி.யு பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
ஜெயேந்திர- விஜயேந்திரர் மோதல்
இளையவரின் தொடர்ச்சியான அணுகுமுறைகளால்தான் இவ்வாறு ஏற்பட்டது என்றெல்லாம் சொன்னார்கள். சிகிச்சைக்குப் பிறகு மடத்துக்குத் திரும்பினார் பெரியவர். இருவருக்குள்ளும் அவ்வப்போது நேரடியான வாக்குவாதங்களும் ஏற்பட்டன. அவர் இறந்தபிறகு, மடத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார் இளையவர். இதைப் பற்றிப் பேசியவர், ' நிர்வாகத்துக்குள் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இப்படியே தொடர்ந்தால் நல்லதல்ல' எனக் கூறினார்.
விஜயேந்திரருக்கு எதிர்ப்பு
இதனை மறுத்துப் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், ' இவ்வளவு நாள் வரையில் கணக்கு வழக்குகள் எப்படி பராமரிக்கப்பட்டதோ அதேநிலை தொடர வேண்டும். பெரியவரின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்ய வேண்டாம்' எனக் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பெரியவருக்கு எதிராக விஜயேந்திரர் செய்த சில விஷயங்களைப் பற்றியும் பேசத் தொடங்கியுள்ளனர். மடத்துக்குள் எழுந்துள்ள பூசல்கள் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்" என்றார்.