காஞ்சி சங்கரமடத்தின் 70வது மடாதிபதி பொறுப்பை தொடங்கிய விஜயேந்திரர்- சுந்தரேச ஐயர்
காஞ்சி சங்கரமடத்தின் புதிய மடாதிபதியாக விஜயேந்திரர் தனது பணியை தொடங்கியுள்ளார்.
காஞ்சிபுரம்: ஜெயேந்திரர் மறைவையடுத்து காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் தனது பொறுப்பை தொடங்கியுள்ளார் என மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரேச ஐயர் தெரிவித்துள்ளார்.
காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70வது மடாதிபதியாக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது.
ஜெயேந்திரர் மறைவையடுத்து காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர மடத்தின் அனைத்து நிர்வாக பொறுப்பையும் அவர் கவனிக்கத் தொடங்கியுள்ளதாக சுந்தரேச ஐயர் கூறியுள்ளார்.
மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் படம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும் 13 ஆம் சிறப்பு பூஜைகளை விஜயேந்திரர் செய்வார் என்றும் அவர் கூறினார். 13 நாட்கள் காரியங்கள், சடங்குகள் முடிந்த உடன் முறைப்படி விஜயேந்திரர் 70வது பீடாதிபதியாக நியமனம் செய்யப்படுவார்.
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தற்போது 49 வயதாகிறது. இவரது இயற்பெயர் சங்கர நாராயணன். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் எனும் கிராமத்தில் இவர் 1969ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம்தேதி பிறந்தார். 14 வயதிலேயே மடத்துக்கு வந்து விட்டதால் சங்கர மடத்தின் அனைத்துப் பணிகளிலும் இவருக்கு அதிகமான அனுபவம் உள்ளது.
குழப்பம்?
முன்னதாக 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்ப்பேற்றார் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதற்கு மடத்தின் செய்தித் தொடர்பாளர் அக்னி என்பவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
அதேசமயத்தில் சுந்தரேச ஐயர் செய்தியாளர்களிடம் 70வது மடாதிபதிக்கான பொறுப்புகளை விஜயேந்திரர் தொடங்கிவிட்டார் எனவும் பேட்டியளித்தார். விஜயேந்திரர் விவகாரத்தில் தொடக்கத்திலேயே குழப்பம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.