"ஞான நிலை"யில் இருந்தாராமே விஜயேந்திரர்.. என்ன சொல்ல வருகிறார் எச். ராஜா??
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்ததாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்ததாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் தந்தையான மறைந்த பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிடப்பட்டது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த அகராதியை வெளியிட்டார். இந்த விழாவில் காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திரர் கலந்துகொண்டார்.
சர்ச்சையான விஜயேந்திரர்
விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நிற்க, விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஞானநிலையில் இருந்தாராம்
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு தமிழ் அமைப்புகளும் திராவிட இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் ஞானநிலையில் அமர்ந்திருந்தார் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
அவமானமான செயல் அல்ல
விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்ததை குற்றம் என சொல்ல முடியாது என்றும் எச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரர் அமர்ந்திருந்தது அவமானமான செயல் அல்ல என்றும் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழியின் விரோதிகள்
தமிழ்மொழி என்பது தெய்வம் என்று கூறியுள்ள எச் ராஜா, திராவிட இயக்கங்கள்தான் தமிழ்மொழியின் விரோதிகள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
கருணாநிதியுடன் ஒப்பிடு
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் எச் ராஜா விஜயேந்திரருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றார். நேற்று விஜயேந்திரரின் செயலை நியாயப்படுத்தும் விதமாக திமுக தலைவர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்துநிற்காத வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.