பாரம்பரிய முறையிலும் நவீன முறையிலும் எண்ணெய் கழிவுகளை அகற்றுங்கள் - விஜயகாந்த்
பல ஆயிரம் டன் தென்னை நார்களை கடலில் கலந்துள்ள கழிவுகளின் மீது ஹெலிகாப்டர் மூலம் தூவி, எண்ணெய் கழிவுகளை நீக்கலாம்
சென்னை: சென்னை காமராஜர் துறைமுகம் அருகே கடந்த வாரம் இரண்டு கப்பல்கள் மோதிய விபத்தில் பல டன் எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்துள்ளன. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எண்ணெய் கழிவுகளை வாளியில் அள்ளி வெளியேற்றி வருகின்றனர்.
நேற்று எண்ணூர் கடற்கரை பகுதிக்கு சென்று ஆய்வு செய்த விஜயகாந்த், எண்ணெய் கழிவை வாளியில் அள்ள கடல் என்ன கிணறா? என்று கேட்டார். இன்று எண்ணெய் கழிவுகளை அகற்ற ஐடியா ஒன்றையும் கொடுத்துள்ளார்.
கடலில் பரவியுள்ள எண்ணெய் படலங்களை நீக்குவது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கை:
எண்ணெய் கழிவுகள்
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் படலங்கள் பரவி இருக்கும் இடங்களை நேற்று நேரில் சென்று நான் ஆய்வு செய்தேன். தற்போது கரையோதுங்கியுள்ள எண்ணெய் கழிவுகளின் அளவு மொத்த பாதிப்பில் சிறுதுளியே.
அதிர்ச்சியடைந்தேன்
கடலில் பல கிலோ மீட்டர் தூரம் எண்ணெய் படலங்கள் பரவியுள்ள பரப்பளவின் பாதிப்பை காட்டும் அதிர்ச்சிகரமான புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
அதனடிப்படையில் கரையோரங்களில் மட்டுமல்லாது கடலின் நடுவில் எண்ணெய் கழிவுகள் மிகப்பெரிய அளவில் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.
உடனடி நடவடிக்கை
நிலைமையை உணர்ந்து இந்த விவகாரத்தில் வழக்கம்போல் பொறுமையையும் அமைதியையும் கடைபிடிக்காமல் வெளிநாடுகளில் இருந்து நவீன தொழில்நுட்ப கருவிகளை வரவழைத்து, எண்ணெய் கழிவுகளை முழுமையாக நீக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரவாமல் தடுக்க வேண்டும்
கடலையும்,அதில் வாழும் கடல்வாழ் உயிரினங்களையும், அதனை நம்பி வாழும் மீனவர்களையும் பாதுகாக்கவும், புதுச்சேரி,கடலூர் வரை பரவியுள்ள எண்ணெய் படலங்களை உடனடியாக அகற்றவும் மேலும் அது பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன்.
பாரம்பரிய முறை
நமது தமிழ்நாட்டின் பண்டையகால பாரம்பரிய முறைப்படி கழிவுகளை அகற்றுவதற்கு தென்னை நார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பல ஆயிரம் டன் தென்னை நார்களை கடலில் கலந்துள்ள கழிவுகளின் மீது ஹெலிகாப்டர் மூலம் தூவி, எண்ணெய் கழிவுகளை நீக்கலாம் என்ற யோசனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்.